திங்கள், ஜூலை 09, 2012

அடிமையும் சுதந்திரமும்...


அடிமையும் சுதந்திரமும்...



கருப்புக் கும்மிருட்டில்
பெருக்கல் குறியிட்டு
அடிமையாய்க் குறுகிப்
பனிக்குடத்தில் தலைகீழாய்த்
தசமாதத் தவமிருந்தேன்.
வலிகொடுத்து வழிபெற்று
வெளிவந்த கோலத்திலே
கண்ணள்ளிய ஒளிவெள்ளக்
காட்சியதைக் கவனிக்காது
கவலையின்றி மறந்திட்டேன்!
காலம்போன காலத்திலே
கண்சொருகித் திரைவிழுந்து
விழிவிரித்துப் பார்த்தாலும்
ஒளிசுருங்கிப் போகையிலே
காண்கின்ற காட்சிய‌து
மனத்திரையில் புகைப்படமாய்
நிலைக்குமா? என்னுங்
கவலையிலே திளைத்துக்
காட்சியையே மறந்திட்டேன்
வாழ்க்கை நாடகத்தின்
திரைவிழுந் தருணத்தில்
காட்சிகளே சாட்சிகளாய்
அனைவரும் நினைக்கையில்
திரைகாட்டும் வெறுமையில்
பெருக்கல் குறியிட்டுக்
கருப்புக் கும்மிருட்டில்
சுதந்திரமாய்க் கலந்துவிட்டேன்!


சனி, ஜூலை 07, 2012

கும்கி - 9


இன்னும் பலப்பல அதிசயம் பகர்வேன்
அறிந்து நினைந்து நினைந்து மகிழ்வீர்
பரந்து பட்டபூமிப் பந்தில் நாங்கள்
உவந்து வாழும் ஆயுள் அறிவீரோ?
மனிதர்க்கு நூறு எமக்கோ ஆயிரமென்றே
ஏளனமாய்ச் சொல்லி கும்கி குதித்தது!

ஆ!என்ன! சொல்ல‌து மெய்யா பொய்யா?
என்றபடி செல்வன் செல்வியைப் பார்த்தான்.

இருப்பதை விடுத்துப் பறப்பதைப் பார்ப்பதில்
மனிதர்க்கு என்றும் நிகரேதும் உண்டோ?!
எமதாயுள் அதிகமெனுங் கவலையை விடுவீர்!
எமதர்மன் வருநாளை யாரறிவார் சொல்வீர்!
மனிதர்க்கு ஆயுளொரு நூறு ஆண்டாம்
எமக்கிங்கு உளதோ ஆயிரம் நாளாம்
வாநாள் முழுதும் உழைப்பின்றி வீணே
நாறும் நூறால் பலனென்ன சொல்வீர்?

குறைபட்ட ஆயுளை விளக்க‌க் கேட்டதும்
தேய்ந்திட்ட‌ நிலவாய்ச் செல்வி சோர்ந்தனள்.
வெறும் மூவாண்டில் என்னதான் செய்வாயோ?
இப்போது வயதென்ன? சொல்நீ! என்றே
அடுக்கு அடுக்காய்க் கேள்வியைத் தொடுத்தாள்!

இருக்குங் காலத்தில் மகிழ்வுட னிருந்தால்
அருகும் ஆயுளால் கவலை வருமோ?
சீரோடு ஊராண்டு உலகாண்டு களித்திட்டேன்
மூவாண்டில் ஓராண்டு இன்றோடு கழித்திட்டேன்
யான்பிறந்த நாளில் வருந்த ஏதுமிலை!
மழலைகள் நீவிர் மகிழ்ந்து ஆடுவீர்!

பிறந்த நாளென்றால் எங்கிருந்து வருமோ?
அவ்விடத்து வந்தே நிறைந்தது குதூகலம்!
சுணைக்கால் பிடித்துக் குலுக்கினான் செல்வன்!
நீஆணா? பெண்ணா? கேட்டாள் செல்வி!

இனிக்கும் பசும்பாலும் குறளெனும் முப்பாலும்
தாய்மைப் பெண்பாலும் கம்பீர ஆண்பாலும்
எப்பாலும் வருதற்கும் முப்போதே அப்போதே
உருவான குடியானவர் நாங்கள் எமக்குள்
ஆண்பால் பெண்பால் பேதமில்லை அறிவீர்!
இருபாற் குணமும் ஒருங்கே கொண்டு
அரிதாய் விளங்கும் அர்த்தநாரி காண்பீர்!
இன்னும் ஏதேதோ சொல்லத் துவங்க‌
செல்வி! செல்வா! அழைத்தார் பாரதி!

தொடரும்...

வியாழன், ஜூலை 05, 2012

கும்கி - 8

பார்க்கச் சிறியோன் என்றே நினைத்தீரோ
தீர்க்கக் காரியம் புரியும் என்னை?
மூர்த்தி சிறிதானும் கீர்த்தி பெரிதெனல்
ஆர்க்கும் இறைக்கும் என‌க்கும் பொருந்தும்!

பாரியின் தேரிலன்று முல்லை வளைந்தாற்போல்
செல்வியின் விரலில் சொகுசாய் வளைந்தாடி
மூச்சுக்கும் சொல்லுக்கும் இடைவெளி விடாது
கீச்சுக் குரலில் கும்கி பகன்றது.

ஒருவிரல் நசுக்கலில் உயிரளவு கொண்டாலும்
பெருமை அடிப்பதில் அடிக்க ஆளில்லையே!
பிள்ளைப் பருவத்தீ ரென்றே ஏளனமோ?
பள்ளி சென்றறிவு கொள்வதும் அறிவாயோ?

காதும் குத்தியாச்சு! யாரும் அங்கே
சுற்றிப் பூவைக்க இடமும் இல்லை!
சொல்வ தெல்லாம் கேட்டுத் தலையாட்டிச்
செல்வியிவள் செல்லாள்! அறிவா யென்றாள்!

நடுநிசி போலும் இருண்ட மாநிழலில்
சமதளத்தில் சமுக்கமாய் சருகு நீக்கிக்
கிடைத்த இடத்தில் கவனப் பக்குவமாய்க்
கும்கியைக் கீழிறக்கி மெதுவாய் விடுத்தாள்!

ஏமாற்ற ஏமாற நானோ மனிதனில்லை!
வழிவழி வந்த அறிவிருக்க எமக்குப்
பள்ளியும் செல்லத் தேவையும் இல்லை!
எம்கதை சொல்வேன் தெளிய அறிவீர்!

வெள்ளையர் கருப்பர் குட்டை நெட்டையர்
மூக்கு சிறுத்தோர் தங்க முடியோர்
இன்னுஞ் சில‌விதமென‌ மானுடர் இருப்பர்
எமக்கோ ஈராயித்து இருநூறு இனமுண்டு!

மண்தோன்றி வளந்தோன்றாப் பழைய காலம‌தில்
மண்தோண்டிச் சிறந்தோங்கப் பரமன் படைத்தனன்!
பழுதேதும் இன்றி உழுதுண்டு வாழ்ந்து
தரிசான வயலைப் பரிசாக்கும் பணியெமது!

ஆண்டுகள் கொண்டு கொஞ்சம் அளந்தால்
வாண்டுகள் நீங்கள் கோடிகோடிப் புதியோர்!
இறுக்கப் பூமியிளக்கிய பழங்குடி நாங்கள்
நேற்றுப் பிறந்த புதுக்குடியினர் நீங்கள்!

கும்கி சொல்லில் சந்தேகம் இருப்பின்
நூற்புழுவாய் மாறி நூலகஞ் சென்று
வைட், லாயிட், டார்வின் போன்றோர்
எம்மைப் பற்றிச் சொன்னதைப் படிப்பீர்!

ஏதேதோ சொல்லும் கும்கியைக் கண்டு
தோதாய்ச் சம்மணிட்டு எதிரெதிர் அமர்ந்து
ஒருமித்துக் கருத்தைக் காதில் வைத்தபடி
இருந்தனர் நம்பியும் நம்பாமலும் தும்பிகள்.

(தொடரும்)