திங்கள், ஜனவரி 14, 2013

இனிப்பு






அன்று.

காலை விரைவாய்க் கதிரவனை முந்தி
மாலை கருக்கலில் அவனைப் பிந்தி
ஏற்றிக் கட்டியும் வேட்டியில் படிந்த
சேற்றில் கவலை கிஞ்சித்து மின்றி
கூரான ஏர்கொண்டு ஆழவுழுதுச் சீராய்
ஏற்றங் கொண்டு ஏற்றம் இறைத்து
மண்ணிடு பொடிவிதை உயரெரு உரத்திலும்
தாயன்பில்  மூவேளை ஊட்டுமாப் போலே
திங்கள் மும்மாரி பொழிந்த சிறப்பிலும்
பருவத்தே மேனி மிளிரும் பெண்போலே
அறத்தார் புகழ்திரு வளருமாப் போலே
கதிர் சிறந்து பொன்னான மணிகொண்டு
சான்றோர் அடக்கம் போல் வளைந்து
எதனாலும் அளக்க முடியா அறுவடையில்
வாரிக் கொட்டிய நல்நெல் மூட்டையெலாம்
வாரிக் கட்டிய செல்வ மூட்டையாகி
மணம் நிறைந்து மனம் நிறைந்து
தெற்கிருந்து வடக்கேகும் வண்ணச் சூரியனைத்
தையன்று நன்றி கொண்டு படையலிட‌
பொங்கலும் கரும்பும் இனிப்பாய் இனிக்க
ஆனந்தக் கண்ணீரும் தித்திப்பாய் இனிக்க‌
உள்ளமும் பொங்கி உலகமே இனித்தது.

இன்று.
காலை விடியல் தெரியா உறக்கம்
மாலை மயக்கமும் அறியா முயக்கம்
வியர்வை கண்டறி யாதுடல் முடக்கம்
விதையைக் காட்டிலும் உரமே அதிகம்
மடையைக் காட்டிலும் மருந்தே அதிகம்
மழைத்தாய் பொய்த்து கதிரவன் வறுத்து
சோளப் பொம்மை மணமகனாப் போலே
கண்டதைத் திணித்து களத்தினில் விளைத்து
பதவிசாய்ப் படங்காட்டிச் சந்தையில் விற்றுக்
காசாக்கி யெண்ணி வீட்டுக்கும் வாராது
முதலுக்கு மோசமாகி வட்டிக்கே வழியாக்கி
அடுத்தென செயவென்றே பிறழ்ந்து நிற்கையில்
வேண்டாத செல‌வாய்த் தைமகள் வந்துநிற்க‌
எரிவாயு அடுப்பில் எவர்சில்வர் பானையில்
ஓரமாய்ப் பொங்கிய கையளவுப் பொங்கல்
ஏதோ கொஞ்சம் நாக்கில் இனித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக