புவியில் அடிப்படையில் மூன்று பாறை வகைகள் உள்ளன. தீப்பாறை, உருமாறிய பாறை, படிவுப் பாறை என்பனவாகும். பையனின் பாடப்புத்தகத்தைப் படித்துச் சொல்லிக் கொடுக்கும் போது தோன்றிய கவிதை! படங்கள் விக்கிபீடியாவிலிருந்து!
தீப்பாறை:
மேல்வறுக்கும் ஆதவன் அரைவிடுப் பெடுப்பான்
மூச்சுமுட்டும் பாதாளன் முச்சூடும் அவிப்பான்
இருதலைக் கொள்ளியாய் எரிந்தெரிந் திறுகி
கல்லாய்ச் சமைந்து பிறந்திடும் பாறை!
உருமாறியபாறை:
இயற்கைச் சிற்பி வளியுளியால் செதுக்க
மழைநீராட்டி தூளெலாம் ஒற்றி ஒதுக்க
நுனிசிறுத்து அடிபெருத்து புவிக்கோ புரமாய்த்
திருவாகி உருமாறிக் கொண்டிடும் பாறை!
படிவப்பாறை:
மூடர் செல்வம்போல் அறிவோர் துயரம்போல்
செதுக்கிய தூளெலாம் வெள்ளத்தில் புரண்டு
அருவிபல கண்டு சமவெளியுந்தான் கண்டு
வண்டலாய்ப் படிந்தும் கருவாகும் பாறை!
முப்பாறை சொல்லும் கதையென்ன காண்;
இளக்கமும் இறுக்கமும் இங்கு பிறப்பிடமாம்
எதுவரினும் நிலையான உறுதியே இருத்தலாம்
கரைந்தாலும் பயனிட்டுப் புகழ் கொள்தலாம்.