வியாழன், ஆகஸ்ட் 08, 2013

நத்தையாரே



நத்தையாரே நத்தையாரே எங்கே போறீங்க?
சொத்தைவித்து புத்தகத்தை வாங்கப் போறேங்க!

நத்தையாரே நத்தையாரே என்ன செய்றீங்க?
வித்தையெல்லாம் கத்துக்கிட்டு ஜெயிக்கப் போறேங்க!

நத்தையாரே நத்தையாரே என்ன படிச்சீங்க?
ஒத்தையாளா ஆங்கிலந்தான் படிச்சு வைச்சேங்க!

நத்தையாரே நத்தையாரே எதுக்கு படிச்சீங்க?
தமிழைப்போல இனிக்குதான்னு பார்க்கப் படிச்சேங்க!

நத்தையாரே நத்தையாரே என்ன கண்டீங்க?
முத்தான தமிழைப் போல ஏதுமில்லீங்க!

செவ்வாய், ஆகஸ்ட் 06, 2013

பாறை

புவியில் அடிப்படையில் மூன்று பாறை வகைகள் உள்ளன‌. தீப்பாறை, உருமாறிய பாறை, படிவுப் பாறை என்பனவாகும். பையனின் பாடப்புத்தகத்தைப் படித்துச் சொல்லிக் கொடுக்கும் போது தோன்றிய கவிதை! படங்கள் விக்கிபீடியாவிலிருந்து!

தீப்பாறை:


மேல்வறுக்கும் ஆதவன் அரைவிடுப் பெடுப்பான்
மூச்சுமுட்டும் பாதாளன் முச்சூடும் அவிப்பான்
இருதலைக் கொள்ளியாய் எரிந்தெரிந் திறுகி
கல்லாய்ச் சமைந்து பிறந்திடும் பாறை!

உருமாறியபாறை:


இயற்கைச் சிற்பி வளியுளியால் செதுக்க‌
மழைநீராட்டி தூளெலாம் ஒற்றி ஒதுக்க‌
நுனிசிறுத்து அடிபெருத்து புவிக்கோ புரமாய்த்
திருவாகி உருமாறிக் கொண்டிடும் பாறை!

படிவப்பாறை:


மூடர் செல்வம்போல் அறிவோர் துயரம்போல்
செதுக்கிய தூளெலாம் வெள்ளத்தில் புரண்டு
அருவிபல கண்டு சமவெளியுந்தான் கண்டு
வண்டலாய்ப் படிந்தும் கருவாகும் பாறை!

முப்பாறை சொல்லும் கதையென்ன காண்;
இளக்கமும் இறுக்கமும் இங்கு பிறப்பிடமாம்
எதுவரினும் நிலையான உறுதியே இருத்தலாம்
கரைந்தாலும் பயனிட்டுப் புகழ் கொள்தலாம்.