சனி, ஜூன் 07, 2014

தா வரம்!

முத்து வள்ளிக் கிழங்கே
சற்றுங் காறாக் கத்திரியே
வழவழப்பு கண்ட‌தக் காளியே
விழுவிழுப்பு காணா வெண்டையே
உருக்க மணங்கூடு மாநெய்யே
பெருக்க‌ சுவைகுறையாப் பூசணியே
தோள்மட்டும் தொங்கும் புடலையே
நாட்பட்டும் மங்காச் செந்தேனே
அரிந்தெடுத்த இருகாற் பசுங்கீரையே
தெரிந்தெடுத்த முற்றா முருங்கையே
கரைதனிலே கடல்கண்ட உப்பளமே
சிவந்துந் சிவக்கா அப்பளமே
எங்கெங்கு அலைந்தே தேடினும்
அங்கெலாங் கிடையாத் தாவரமே
அங்கமதில் பங்கதுவாய் எப்பிறப்பும்
இங்கிதமாய் வந்திடவே தாவரமே!

ஆகாய நடுக்கம்

காயமின்றித் தொலைகை சுகத்தின் உச்சம்
மிச்சமின்றித் தீர்வதிலே இன்பமே மிச்சம்
கோடிப்பேர் கோடிப்பேர் கொண்டு கோடியிற்
றொழுதுங் காணான் ஒளியுந் தொழிலான்
ஒளிய விரும்பும் ஒளியான் இருளான்
வளர்ந்த நகம் வெட்டி எரிதலாய்
நிலமது நடுங்கி நலமது நீக்கும்
இருப்பு நடுங்கின் இன்பம் ஒடுங்குமாயின்
இன்மை நடுங்கின் துன்பம் ஒடுங்குமோ?
இருப்பின் நடுக்கம் மற்றோர் துவ‌க்கமாயின்
இன்மை நடுக்கம் மற்றோர் முடிவோ?