ஞாயிறு, ஏப்ரல் 22, 2012

உலகைப் புரட்டிப் போட்ட 100 அறிவியல் கண்டுபிடிப்புகள் - 32

32. உலகின் முதல் டினோசர் படிமம் (First Dinosaur Fossil)

கண்டறிந்தவர்கள்: ஜிடியோன் மேன்டெல் மற்றும் வில்லியம் பக்லேண்ட் (Gideon Mantell and William Buckland)


கண்டறிந்த ஆண்டு: 1824

விஞ்ஞானிகள் உட்பட அனேகமானோர் இவ்வுலகில் இப்போதிருக்கும் உயிரினங்களும், மரம், செடி, கொடி வகைகளும் உலகம் தற்போது இருப்பது போலவே தான் எப்போதும் இருந்து வருகின்றது என்று நம்பினார்கள். இந்த நம்பிக்கையை டினோசர்களின் படிமங்கள் உடைத்தெறியும் வண்ணம் இருந்தன. அது மட்டுமன்றி அவைகளின் படிமங்களின் மூலம் நாம் கற்பனையே செய்து பார்க்க முடியாத அளவிலும் வடிவத்திலும் பல மிருகங்களும் புவியில் வாழ்ந்து தற்போது உருத்தெரியாமல் அழிந்திருக்கின்றன என்று கண்டறிய முடிந்தது.

இது தொல்பொருள் மற்றும் வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய உயிரியல் ஆராய்ச்சியில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனை என்றால் அது மிகையானதல்ல. சாதாரண மனிதனால் எளிதில் புரிந்து கொள்ள முடியாத பரிணாம வளர்ச்சியைக் கொண்டிருந்த டினோசர்கள் வியப்பில் ஆழ்த்தும் வண்ணம் முற்காலத்தில் வாழ்ந்திருக்கின்றன என்று நிரூபணம் ஆனது.

எவ்வாறு கண்டறியப்பட்டது?

எலும்புகளின் படிமங்கள் முன்பே கண்டறியப்பட்டிருந்தாலும், அவைகள் வழக்க‌ழிந்து போன மிருகங்களினுடையவை என்று யாருமே கற்பனை செய்து பார்க்கவில்லை. 1677ல் ராபர்ட் ப்ளாட் எனும் ஆங்கில விஞ்ஞானி கண்டுபிடித்த படிம எலும்பு 220 ஆண்டுகள் கழித்து அது ஒரு மிகப்பெரிய மாமிசபட்சிணி டினோசரின் தொடை எலும்பு என்று கண்டுபிடிக்கப்பட்டது! அதைக் கண்டறிந்த போது அது ஒரு பெரிய மிருகத்தின் விரை என்று கூறி அதன் மூலம் புகழ் பெற்றிருந்தார் ப்ளாட். அறிவியலைப் பொருத்தவரை இரு ஆங்கில விஞ்ஞானிகள் தனித்தனியே 1824ல் கண்டறிந்து வெளியிடும் வரை இந்த விஷயத்தில் ஒரு இருண்ட பகுதியாகவே இருந்தது. எனவே அவ்விருவரும் டினோசரைக் கண்டுபிடித்ததைப் பகிர்ந்து கொண்டனர்.

1809ல் (டார்வினின் பரிணாமக் கொள்கைக்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு) ஆங்கில நாட்டுப்புற வைத்தியரான ஜிடியோன் மேன்டெல் இங்கிலாந்தில் லிவிஸ் என்ற ஊரில் வாழ்ந்து வந்தார். ஒரு நோயாளியைக் காணச் சென்ற போது மேன்டெல்லின் மனைவி மேரி ஆன் அவரிடம் ஒரு பெரிய பையிலிருந்து சில பற்களை எடுத்து அவரிடம் காட்டினார். அந்தப் பற்கள் மிகப் பெரியதாக இருந்ததோடன்றி, அது ஒரு சைவபட்சிணியின் பற்கள் என்பதும் அவ்வளவு பெரிய பற்கள் கொண்ட மிருகம் தற்போது கிடையாது என்பதும் ஆச்சரியப்படும் வகையில் இருந்தது. மேன்டெல் புவியியலிலும் தன்னார்வம் மிகுந்தவர் என்பதால், முற்கால விலங்குகளின் படிமங்களைப் பல ஆண்டுகளாக சேகரித்து வந்தார். அவரால் அப்பற்களை எம்மிருகத்தினுடையது என்று அடையாளம் காண இயலவில்லை. ஆனால் அவரால் அந்தப் பற்கள் கிடைத்த இடத்திற்குச் சென்று அங்கிருந்த பாறைகளின் வயதைக் கொண்டு அவை மெசோசிக் காலத்தையது என்றும் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தியது என்றும் அறிந்து கொள்ள முடிந்தது. 

(நன்றி: விக்கிபீடியா)

அவ்விடத்தில் அவருக்குக் கிடைத்த முதல் பொருள் இந்தப் பல் அல்ல. ஆனால், இந்தப் பல் தான் மிக அதிசயிக்கத்தக்க அளவில் இருந்தது. அவர் அதை புகழ்மிக்க பிரெஞ்ச் இயற்பியலாளர் சார்லஸ் சூவியரிடம் சென்று காட்டினார். அவரோ அந்தப் பல் ஏதாவது காண்டாமிருகம் போன்ற மிருகத்தின் பல்லாக இருக்கும் என்று யூகித்தார். அதன் பின் மேன்டெல் அதைத் தனியே ஒரு புறமாய் வைத்துக் கொண்டார்.

1822ல் இக்வானா எனும் பல்லி இனத்தின் பற்களைக் கண்டபோது அவை தாம் 13 ஆண்டுகளுக்கு முன்பு கண்ட பற்களின் மிகச் சிறிய வடிவமாக இது இருக்கின்றதே! என்று அதிசயமாக ஒப்பிட்டுப் பார்த்தார் மேன்டெல். அந்தப் பல் கிடைத்த இடத்தில் கிடைக்கப்பெற்ற மற்ற எலும்புகளுடன் சேர்த்து வைத்துப் பார்த்து விட்டு மேன்டெல் தான் பழங்காலத்தில் வாழ்ந்து அழிந்து போன பல்லி இனத்தைச் சார்ந்த ஒரு மாபெரும் மிருகத்தைக் கண்டறிந்ததாக அறிவித்தார். அதற்கு இக்வானாடூன் (இக்வானா பல் கொண்ட) என்றும் பெயர் சூட்டினார். அவரது கண்டுபிடிப்பை 1824ல் அதிகாரபூர்வமாக வெளியிட்டார்.

அதே காலகட்டத்தில் ஆக்ஸ்போர்டு பல்கலையில் பேராசிரியராக இருந்த வில்லியம் பக்லேண்ட் இங்கிலாந்தின் ஸ்டோன்ஸ்பீல்ட் பகுதியில் படிமங்களைச் சேகரித்துக் கொண்டிருந்தார். 1822ல் அவர் ஒரு பழங்கால மாபெரும் மிருகத்தின் தாடை மற்றும் பல தொடை எலும்புகளைக் கண்டறிந்தார். அதே மிருகம் தான் 150 ஆண்டுகளுக்கு முன்பே ராபர்ட் ப்ளாட் கண்டறிந்த மிருகம் என்றும் ஆனால் அவரால் சரியாக இனங்காண முடியாத மிருகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பக்லேண்ட் அம்மிருகம் இரண்டு கால்களை உடைய ஒரு மாமிச பட்சிணி என்று கண்டறிந்தார். அதன் எலும்பமைப்பைக் கொண்டு அது ஒரு ஊர்வன/பல்லி இனத்தைச் சேர்ந்தது என்று அறிவித்தார் பக்லேண்ட். அதை அவர் மெகாலோசரஸ் (மாபெரும் பல்லி) என்று பெயரிட்டு அழைத்து அதை 1824ல் அதிகாரபூர்வமாக வெளியிட்டார். இவ்விரு அறிவியல் கண்டுபிடிப்புகளின் மூலம் டினோசர்களின் காலம் வெளிச்சத்துக்கு வந்தது.

உலகைப் புரட்டிப் போட்ட 100 அறிவியல் கண்டுபிடிப்புகள் - 31

31. மின்காந்தவியல் (Electromagnetism)

கண்டுபிடித்தவர்: ஹான்ஸ் ஓயெர்ஸ்டெட் (Hans Oersted)

ஆண்டு: 1820

1820 வரை காந்தம் என்பது இயற்கையாகக் கிடைப்பது என்றே நம்பப்பட்டு வந்தது. மிகவும் பலம் குன்றிய காந்தமான இது திசைகாட்டியாகவும் ஒரு அதிசயமாகவும் மட்டுமே பார்க்கப்பட்டு வந்தது. ஆனால், இன்றைய பல மோட்டார்களிலும், மின்சாரம் தயாரிப்பதற்கும் மின்காந்தம் பெரிய அளவில் பயன்படுகின்றது. இவ்வளவு ஏன்? அன்றாடம் நாம் வீடுகளில் பயன்படுத்தும் அசையக் கூடிய அனைத்து இயந்திரங்களிலும் இயக்கக்காரணியாக விளங்குவது இந்த மின்காந்தம் தான்!

ஓயெர்ஸ்டெடின் இந்த அரிய கண்டுபிடிப்பு நவீன அறிவியலின் அணையை மடை திறந்து விடுவதாக இருந்தது என்று தான் கூறவேண்டும். இவரது கண்டுபிடிப்பு பின்னாளில் மைக்கேல் ஃபாரடே மற்றும் ஆண்ட்ரே ஆம்பியர் ஆகியோரின் கண்டுபிடிப்புகளுக்கும் காரணமாக விளங்கியது.

ஓயெர்ஸ்டெட் எவ்வாறு கண்டறிந்தார்?

1777ல் தென் டென்மார்க்கில் பிறந்தார் ஓயெர்ஸ்டெட். பல்கலைக்கழகத்தில் அறிவியல் பயின்றாலும் அவருக்கு தத்துவத்தில் தான் ஈடுபாடு அதிகம் இருந்தது. அனைத்து இயற்கை விசைகளிலும் ஒரு ஒற்றுமை இருப்பதாக நம்பிய ஜான் ரைட்டரின் வழி நடப்பவராக இருந்தார் ஓயெர்ஸ்டெட். அனைத்து இயற்கை விசைகளையும் ஆராய்ந்தால் அவை இறுதியில் உர்க்ராஃப்ட் எனும் முதன்மை விசையைச் சென்றடைவதாக இருக்கும் என்று நம்பினார். 1813ல் அறிவியல் கற்றுத்தரும் ஆசானாக நியமிக்கப்பட்ட போது, அவரது நம்பிக்கையை நிரூபிக்க அனைத்து வேதியியல் விளைவுகளையும் கொண்டு உர்க்ராஃப்டைக் கண்டுபிடிப்பதன் மூலம் அனைத்துக்கும் ஒரே காரணம் என்ற முடிவை எடுப்பத‌ற்காக ஆராய ஆரம்பித்தார்.

பெஞ்சமின் ஃப்ராங்க்ளினின் ஆய்வுகளால் நிலைமின்சாரம் குறித்தும் லேய்டன் குடுவைகளில் சேமிக்கப்பட முடிகின்ற சக்தியிலிருந்து கிளம்பும் தீப்பொறிகள் குறித்தும் ஆராய்ச்சிகள் துவங்கப்பட்டு ஆர்வமும் அந்நாளில் காட்டப்பட்டது. 1800 வாக்கில் வோல்டா மின்கலத்தைக் கண்டுபிடித்தார். அதன் மூலம் தடையில்லா மின்சாரம் கிடைக்கும் நிலை ஏற்பட்டது. மின்சாரம் என்பது அறிவியலின் அதிசயமாக உருவானது. 1800க்கும் 1820க்கும் இடையில் 68 புத்தகங்கள் மின்சாரத்தைப் பற்றியே வெளியிடப்பட்டன.

விஞ்ஞானிகளில் வெகுசிலர் மட்டுமே மின்சாரத்திற்கும் காந்தத்திற்கும் தொடர்பிருக்கக் கூடும் என்று சந்தேகித்தனர். 1776 மற்றும் 1777 ஆண்டுகளில் பவாரியன் அறிவியல் பயிற்சிக்கூடம் ஒரு பரிசை அறிவித்தது! மின்சாரம் மற்றும் காந்தத்திற்கும் தொடர்பு ஏதும் உண்டா எனும் கேள்விக்குப் பதிலளிப்போருக்கு பரிசளிப்பதாகக் கூறப்பட்டது. யாரும் அப்பரிசை வெல்லவில்லை! 1808ல் லண்டன் அறிவியல் சங்கமும் இதே கேள்விக்கு ஒரு பரிசை அறிவித்தது. அப்போதும் யாரும் வெற்றி பெறவில்லை!

1820ன் இளவேனிற்காலத்தில், ஹான்ஸ் ஒயெர்ஸ்டெட் ஒருசமயம் வகுப்பில் தனது உரையை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது. வகுப்பறையில் மாணவர்களுக்கு முன் தனது மாபெரும் கண்டுபிடிப்பை அவர் நிகழ்த்தினார். அது கல்லூரி மாணவர்களுக்கான எளிதான சோதனையாகும். எவ்வாறு மின்சாரம் ஒரு பிளாட்டினம் கம்பியைச் சூடாக்குகின்றது? என்பதே அந்தச் சோதனை. ஒயர்ஸ்டெட் மின்சாரத்திலோ காந்தவியலிலோ தனது கவனத்தைக் காட்டியவரல்லர். இருந்தாலும் ஒரு திசைகாட்டியைத் (காந்த ஊசி) தனது மேஜையில் இந்தச் சோதனை நிகழும் போது வைத்திருந்தார்!

மின்கலத்தில் கம்பியை வைத்துத் தொட்டதுமே காந்த ஊசி சடாரென்று பிளாட்டினம் கம்பியை நோக்கிச் செங்குத்தாகத் திரும்பி நின்றது! மின்கலத்திலிருந்து கம்பியை அகற்றியதும் காந்தம் பழைய நிலைக்குத் திரும்பி விட்டது! ஒவ்வொரு முறை அவர் மின்கலத்தைப் பிளாட்டினம் கம்பி கொண்டு தொட்டதும் காந்த ஊசி திரும்புவதும் பின் பழைய நிலைக்குச் செல்வதுமாக ஆட்டம் காட்டியது! இது அனைத்தும் வகுப்பு மாணவர்களின் முன்னிலையில் நடந்தேறியது! மாணவர்களின் கவனம் முழுதும் அதில் சென்றதால் ஒயர்ஸ்டெட் தனது உரையின் போக்கை மாற்றி வகுப்பைத் தொடரலானார்.

அதன் பின்னும் ஒயர்ஸ்டெட் அடுத்த மூன்று மாதங்களில் கோடை வரும் வரை இந்த அதிசயம் குறித்து ஆராய்ச்சி செய்யவில்லை. அதன் பின்னர் தான், மின்சாரம் காந்தத்தின் மீது என்ன விசையைப் பிரயோகிக்கின்றது என்று கண்டறிய முற்பட்டார். இதைக் கொண்டு உர்க்ராஃப்டைக் கண்டறிய முடியுமா என்ற சிந்தனை தான் அவருக்கு இருந்தது.

அவரும் கம்பியை காந்த ஊசியின் மேலே, கீழே, இரு புறங்களிலும் என்று வைத்துப் பார்த்தார். பின்னர் மின்சாரத்தின் ஓட்டத்தை மாற்றிக் கொடுத்துப் பார்த்தார். ஒரு கம்பிக்குப் பதிலாக இரண்டு கம்பிகளைக் கொண்டு ஆய்வைச் செய்து பார்த்தார். ஒவ்வொரு முறை கம்பியை அசைக்கும் போதும் அது காந்த ஊசியின் மேல் ஏற்படுத்தும் அசைவை மிகக் கவனமாகக் கண்காணித்தார். ஒயர்ஸ்டெட் இறுதியாக மின்சார ஓட்டமும், காந்தமும் கவர்ச்சி மற்றும் விலகல் ஆகிய விசைகளை ஒரே நேரத்தில் கொண்டிருப்பதை உணர்ந்தார். சில மாதங்கள் ஆய்வுக்குப் பின்னர், மின்சார ஓட்டம் தன்னைச் சுற்றி ஒரு காந்தப் புலத்தை உருவாக்குவதைக் கண்டறிந்தார். அது நியூட்டன் குறிப்பிட்டது போல் அல்லாமல் புதிய ஒரு விசையாக இருப்பதையும் கண்டார். இந்த விசை நேர் கோடுகளில் செல்லாமல், தன்னைச் சுற்றி வட்டமான பாதையில் சென்றது. குறிப்பாக, மின்சாரம் ஏந்திய கம்பிகள் காந்தத்தின் அனைத்துப் பண்புகளையும் கொண்டிருந்தன. இதன் மூலம் மின்காந்தவியல் என்பது கண்டறியப்பட்டுவிட்டது.

ஒயர்ஸ்டெடைக் கௌரவிக்க டென்மார்க் அரசு ஒருபுறம் அவரது படத்தையும் மறுபுறம் காந்த ஊசியையும் கொண்டு நோட்டை வெளியிட்டு சிறப்பித்தது. (நன்றி: விக்கிபீடியா)


உலகைப் புரட்டிப் போட்ட 100 அறிவியல் கண்டுபிடிப்புகள் - 30

30. மூலக்கூறுகளின் இருப்பு (The Existence of Molecules)

கண்டறிந்தவர்: அமீடியோ அவோகேட்ரோ (Amedeo Avogadro)

ஆண்டு: 1820

பொருட்கள் அனைத்தும் அணுக்களின் தொகுப்பால் ஆனது என்றாலும் எந்த ஒரு பொருளையும் பிரித்துப் பார்த்தால் அது தனித்தனி அணுவால் ஆனதாக இல்லை. உலகில் இருக்கும் அனைத்துப் பொருட்களுக்கும் எவ்வாறு குறைந்த அளவு எண்ணிக்கையில் இருக்கும் கூறுகளால் ஆக்கப்பட்டவையாக இருக்கின்றன என்று அவோகேட்ரோ கண்டறிந்து கூறும் வரை யாருக்கும் அதைப் பற்றிய எண்ணம் உதிக்கவில்லை.

அவரது கண்டுபிடிப்பும் அவோகேட்ரோ எண்ணும் அங்கக, அனங்கக வேதியியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதுடன், எண்ணிக்கை வேதியியல் மற்றும் வாயு விதிகளின் பிறப்பை உறுதி செய்வதாய் இருந்தது.

அவோகேட்ரோ எவ்வாறு கண்டறிந்தார்?

1811ன் வேனிற்காலத்தில், ஒருநாள் 35 வயது பேராசிரியர் அவோகேட்ரோ வகுப்பறையில் அமர்ந்திருந்தார். அவரது கைகளில் இரண்டு அறிவியல் குறிப்புகள் கொண்ட காகிதங்கள் இருந்தன. இத்தாலிய மலைப்பிரதேசமான டூரினில் வெர்சிலி கல்லூரியில் இயற்கை அறிவியல் வகுப்புகள் எடுத்துக் கொண்டிருந்தார் அவர். 25 மாணவர்கள் அவருக்கு விருப்பமான அறிவியலில் அவர் கூறும் பல விஷயங்கள் பற்றிக் குறிப்பெடுத்துக் கொண்டும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டும் இருந்தனர். அன்றைய தினம், அவ்விரு அறிவியல் காகிதங்களையும் சுட்டிக் காட்டி அவற்றில் ஒரு புதிர் இருப்பதாகவும் அதை மாணவர்கள் கண்டறியவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் அவோகேட்ரோ.

அவ்விரு காகிதங்களும் ஆங்கில வேதியியல் விஞ்ஞானி டால்டனும், பிரெஞ்சு வேதியியல் விஞ்ஞானி கேய் லஸ்ஸாக்கும் தனித்தனியே எழுதியவை. ஒவ்வொருவரும் அதில் எவ்வாறு ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜன் அணுக்களைச் சேர்த்து நீராக உருவாக்குவது என்பது பற்றி எழுதியிருந்தனர். அவர்களது சோதனையில் மிகச் சரியாக இரண்டு லிட்டர் ஹைட்ரஜன் வாயு அணுக்களையும், ஒரு லிட்டர் ஆக்ஸிஜன் வாயு அணுக்களையும் சேர்த்தால் மிகச் சரியாக இரண்டு லிட்டர் நீராவி அணுக்கள் கிடைக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டிருந்தது! டால்டன் தனது சோதனையின் மூலம் நீர் என்பது ஹைட்ரஜனின் இரண்டு அணுக்களையும் ஆக்சிஜனின் ஒரு அணுவையும் சேர்த்துக் கிடைப்பது என்று நிரூபித்திருந்தார். கேய் லஸ்ஸாக் தனது சோதனையின் மூலம், ஒரு லிட்டர் கொள்ளள‌வில் எந்த ஒரு வாயுவின் அணுக்களின் எண்ணிக்கையும் அது எந்த வாயுவாக இருந்தாலும் சரி சமமான எண்ணிக்கையிலேயே இருக்க முடியும் என்று நிரூபித்திருந்தார்.

இவ்விரு ஆராய்ச்சிக் கட்டுரைகளும் மிகப் பெரிய புரட்சியையே ஏற்படுத்தி இருந்தன. ஆனால், அவோகேட்ரோவின் முதல் வாசிப்பிலேயே அவர் அவற்றிலிருக்கும் முரண்பாடுகளை ஏற்றுக் கொள்ள முடியாதவராக இருந்தார். டால்டன், கேய் லஸ்ஸாக் இருவருமே இரண்டு லிட்டர் ஹைட்ரஜன் மற்றும் ஒரு லிட்டர் ஆக்ஸிஜனுடன் தான் தமது ஆராய்ச்சியைத் துவங்கியிருந்தனர். ஆக, மொத்தம் அங்கே இருப்பது மூன்று லிட்டர் வாயு அணுக்கள். ஆனால் இருவருமே இரண்டு லிட்டர் நீராவி அணுக்களுடன் தான் தங்கள் ஆய்வை முடித்திருந்தனர். ஒவ்வொரு அணுவின் ஒவ்வொரு லிட்டர் அளவும் ஒரே அளவு எண்ணிக்கையில் அணுக்களைக் கொண்டிருக்குமானால், எப்படி மூன்று லிட்டர் அணுக்களும் சேர்ந்து இரண்டு லிட்டர் நீராவி அணுக்களுக்குள் அடைத்து வைக்கப்பட முடியும்? நள்ளிரவில் டூரின் தேவாலய மணி ஒலித்த போது அவோகேட்ராவுக்கு ஞானோதயம் பிறந்தது! "டால்டனும் கேய் லஸ்ஸாக்கும் தங்கள் ஆராய்ச்சியில் பயன்படுத்திய சொற்கள் தான் தவறாக இருக்க முடியுமே அன்றி ஆராய்ச்சியே தவறாக இருக்காது. ஒரு நீர் அணு என்பது ஏன் இரு வித அணுக்களின் குழுவாக இருக்க முடியாது? ஓர் அணு என்பதற்குப் பதிலாக ஓர் அணுக்குழு என்று இட்டால் சரியாக இருக்குமோ?" இது தான் அவோகேட்ராவின் எண்ணத்தில் உதித்ததாகும்.

அவோகேட்ரோ இந்த சேர்ந்து பரவும் அணுக்குழுவுக்கு மூலக்கூறு என்னும் சொல்லை உருவாக்கினார். (molecule என்பதற்கு கிரேக்க மொழியில் வாயுக்களின் ஊடே சுதந்திரமாக உலாவுதல் எனும் பொருளாகும்.) அதன் பின்னர் அவர் பல சமன்பாடுகளை உருவாக்கி அதன் மூலம் மூலக்கூறுக்கும் அவற்றில் இருக்கும் அணுக்களுக்கும் எண்ணிக்கையைச் சமன் செய்தார்.

ஒரு ஹைட்ரஜனின் மூலக்கூறில் இரண்டு ஹைட்ரஜன் அணுக்களும், அதே போல் ஒரு ஆக்ஸிஜன் மூலக்கூறில் இரண்டு ஆக்ஸிஜன் அணுக்களும் இருந்து, அதே போல் ஒவ்வொரு நீர் மூலக்கூறிலும் இரண்டு ஹைட்ரஜனும், ஒரு ஆக்ஸிஜன் அணுவும் இரு விஞ்ஞானிகளும் கூறியது போல இருந்தால் ஒவ்வொரு லிட்டரில் இருக்கும் ஹைட்ரஜன் மூலக்கூறு எண்ணிக்கை மற்றும் ஒவ்வொரு லிட்டரில் இருக்கும் ஆக்ஸிஜன் மூலக்கூறு எண்ணிக்கையும் சேர்ந்து மிகச் சரியாக இரண்டு லிட்டர் நீராவி மூலக்கூறு எண்ணிக்கைக்குச் சமமாக இருக்கும். அவற்றிலிருக்கும் அணுக்களின் எண்ணிக்கை வித்தியாசமாக இருக்கலாம். ஆனால் அவற்றிலிருக்கும் மூலக்கூறுகளின் எண்ணிக்கை தான் மாறாமல் இருக்கும் என்று கண்டறிந்தார்.

இதன் மூலம், எந்த ஒரு ஆய்வகத்துக்கும் செல்லாமல், ஒரு சோதனைக் குழாயைக் கூடத் தொடாமல், அடிப்படை வேதியியல் கூட அறியாமல் மூலக்கூறின் இருப்பைக் கண்டறிந்தார் அவோகேட்ரோ! அவர் தமது கண்டுபிடிப்பின் மூலம் அடிப்படை வாயு விதியை நிறுவினார். அதாவது ஒவ்வொரு லிட்டர் வாயுவும் ஒரே அளவு தன்னுள் மூலக்கூறு எண்ணிக்கையைக் கொண்டிருக்கும். அது எந்த வாயுவாக இருந்தாலும் சரி! ஒரு லிட்டர் அளவில் ஒரே அளவு வெப்பம் மற்றும் அழுத்தத்தில் மூலக்கூறுகளின் எண்ணிக்கை மாறுவதில்லை. சரிசமமாக இருக்கும் என்பதே அவரது விதி!

உலகைப் புரட்டிப் போட்ட 100 அறிவியல் கண்டுபிடிப்புகள் - 29

29. மின்வேதித் தளை (Electrochemical Bonding)

கண்டறிந்தவர்: ஹம்ப்ரி டேவி (Humphry Davy)


காலம்: 1806

மூலக்கூறுகளில் இருக்கும் அணுக்களின் தளைகள் யாவும் மின்மயமானது என்று கண்டறிந்தார் டேவி. தற்போது நாம் இந்த வேதித் தளைகள் எல்லாம் அணுக்களில் இருக்கும் மின்னேற்றம் பெறப்பட்ட உட்துகள்களை (எலக்ட்ரான்கள்) பங்கிடுவதாலோ அல்லது மாற்றிக் கொள்வதாலோ நடைபெறுகின்றது என்று புரிந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் 1800களில் வேதியியலில் மின்சாரம் அங்கம் வகிக்கின்றது என்று கண்டறிவது என்பது ஒரு புரட்சிகரமானது என்பதை ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும். அத்தகைய புரட்சியைச் செய்தவர் தான் டேவி. மின்வேதியியல் எனும் புதிய உபபிரிவையே உருவாக்க வகை வகுத்தது அவரது கண்டுபிடிப்பு. எவ்வாறு வேதிபொருட்கள் வினைபுரிந்து ஒன்றுடன் ஒன்று இணைந்து புதிய பொருட்கள் உருவாகின்றன என்பதில் புதிய வரையறையை உருவாக்கியது டேவி எனலாம். இந்த முறையைப் பயன்படுத்தி டேவி இரண்டு புதிய மிகமுக்கியமான வேதிப்பொருட்களைக் கண்டறிந்தார். அவை சோடியம் மற்றும் பொட்டாசியம் ஆகும். 

இனி டேவி எவ்வாறு இவற்றைக் கண்டறிந்தார் என்று பார்க்கலாம்.

ஹம்ப்ரி டேவி 1778ல் இங்கிலாந்தின் கடற்கரையோர கார்ன்வெல் எனும் பகுதியில் பிறந்தார். குறைந்தபட்ச பள்ளிப்படிப்பையே கொண்டிருந்த அவர் தாமே படித்தறிந்து தனது அறிவினை விரிவாக்கிக் கொண்டார். தனது பதின்ம வயதிலேயே ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் மருந்து தயாரிப்பவரிடம் உதவியாளராகப் பணிபுரிய ஆரம்பித்தார். ஆனாலும், பிரெஞ்ச் விஞ்ஞானி ஆண்டனி லவாய்ஸியரின் கட்டுரைகள் அவரை அறிவியலின்பால் ஈர்த்தன.

1798ல் இங்கிலாந்து ப்ரிஸ்டலில் தாமஸ் பெட்டோஸ் எனும் பணக்கார வேதியியல் விற்பன்னரிடம் ஆய்வகத்தில் வேலை செய்யும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அங்கே அவர் பல வேதியியல் ஆராய்ச்சிகளைச் சுதந்திரமாகச் செய்து கொள்ளும் அதிர்ஷ்டம் கிடைத்தது. 1799ல் அவர் வாயுக்களை ஆய்வு செய்வதில் ஈடுபட்டிருந்தார். கண்ணுக்குத் தெரியாத வாயுக்களைச் சோதனை செய்வதற்கு அவற்றை முகர்ந்து பார்ப்பது மட்டுமே சிறந்த வழி என்றும் எண்ணியிருந்தார். நைட்ரஜன் ஆக்ஸைடை முகர்ந்து பார்த்து மயக்க நிலைக்குச் சென்றார். அப்போது எல்லாவற்றையும் மறந்து சந்தோசமாகவும் வலிமையாகவும் உணர்ந்தார். அதனால் சிரிப்பூட்டும் வாயு என்று அதற்குப் பெயர் வந்தது. அதை ஞானப்பல்லைப் பிடுங்கி எடுக்கும் போது பயன்படுத்தினார். அதனை அவர் தனது கட்டுரையில் குறித்திருந்த போதும் அதன் பின்னர் 45 ஆண்டுகள் கழித்தே நைட்ரஜன் ஆக்ஸைட் மயக்கமருந்தாகப் பயன்படுத்தப்பட்டது. 

கார்பன் டை ஆக்ஸைடையும் டேவி சோதனை செய்து பார்த்தார். அதைச் சுவாசித்துக் கிட்டத்தட்ட மரணிக்கும் தருவாய்க்குச் சென்றதும் நடந்தது. ஒரு திரைப்படக் கதாநாயகன் போல அழகாக இருந்த டேவி அதற்குத் தகுந்தாற்போல நேர்த்தியாக உடையும் அணிந்து வலம் வருபவராக இருந்தார். அவரது கண்டுபிடிப்புகளைப் பெரிய மேடையில் பலரும் ரசிக்கும் வண்ணம் பிரம்மாண்டமாகச் செய்து காட்டுவதில் வல்லவராகவும் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!

1799ல் இத்தாலிய அலெஸாண்ட்ரோ வோல்டா மின்கலத்தைக் கண்டறிந்ததுடன் உலகிலேயே முதன்முறையாக செயற்கை மின்னோட்டத்தையும் உருவாக்கிக் காட்டினார். 1803 வாக்கில் டேவி பெட்டோஸிடம் 110 இரட்டைத் தட்டுகள் கொண்ட மிகப்பெரிய மின்கலத்தை உருவாக்கவேண்டும் என்று கேட்டார். அதன் பின்னர், தனது முழுக்கவனத்தையும் மின்கலங்களை ஆராய்ச்சி செய்வதில் திருப்பினார் டேவி. மின்கலத்தின் எலெக்ட்ரோடில் பல உலோகங்களையும் ஏன் கரிக்கட்டையையும் பயன்படுத்திப் பார்த்தார். அதே போல் நீர் அமிலம் போன்ற பல திரவங்களையும் மின்கலத்தின் தட்டுகளுக்கிடையே பயன்படுத்தப்படும் எலெக்ட்ரோலைட்டாகப் பயன்படுத்திப் பார்த்தார். 

1805ல் டேவி மின்கலத்தில் இணைத்த போது ஸிங்க் எலெக்ட்ரோட் ஆக்ஸிடைஸ் ஆவதைக் கண்டறிந்தார். அது ஒரு மின்னோட்டத்தால் நடைபெற்ற வேதிவினையாகும். மற்ற எலெக்ட்ரோட்களிலும் இதேபோன்று வேதிவினை மாற்றங்கள் நடைபெறுவதையும் அவர் கண்டறிந்தார். இதன்மூலம் மின்கலத்தில் இருந்து வரும் மின்னோட்டத்தால் வேதிவினைகள் நிகழ்வதைக் கண்டுகொண்டார் டேவி. 

1806ல் நடைபெற்ற ஒரு பிரம்மாண்டமான கூட்டத்தின் முன்னிலையில் திரவ நீரின் மேல் மின்சாரத்தைப் பாய்ச்சி அதை ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் வாயுவாகப் பிரித்துக் காட்டினார்! நீரின் மூலக்கூறுகள் பிளவுபெற்று வாயுக்களாக ஆவதைக் கண்டு கூட்டம் அதிசயித்து நின்றது! வேதித் தளையை உடைக்க மின்சாரத்தால் முடியும் என்று நிரூபணம் ஆனது. டேவியைப் பொருத்தவரை இதற்கு முன் இவ்வாயு அணுக்களைத் தளையில் கட்டி வைத்திருந்தது மின்னோட்டம் என்பதாலேயே அதை மின்னோட்டத்தால் உடைக்க முடிகின்றது என்பது தான். இல்லையென்றால் மின்சாரத்தால் அத்தளையை உடைக்க முடியாது என்று அவர் நம்பினார். இதன் மூலம் அணுக்களிடையே ஏற்படும் உறவின் அடிப்படை அமைப்பைக் கண்டறிந்தவர் ஆனார். இதன்மூலம் வேதிவினையின் முக்கியக்காரணியாக‌ மின்னோட்டம் இருப்பது கண்டறியப்பட்டு பெரிய விஞ்ஞானப் புரட்சிக்கு அது வித்திட்டது.

டேவி தனக்கு முன்னால் இருந்த அனைத்து வேதிப்பொருட்களையுமே எலெக்ட்ரோட்களாகப் பயன்படுத்தி தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். 1807ல் அவர் 250 ஸிங்க் மற்றும் தாமிரத் தட்டுகளை உடைய மிகச் சக்தி வாய்ந்த மின்கலத்தைப் பயன்படுத்தி காஸ்டிக் பொட்டாஷில் சோதனை செய்து எலெக்ட்ரோடில் பொதிந்த ஒரு புதிய வேதிப் பொருளைக் கண்டறிந்தார். நூதனமாக ஒளி விட்டு எரிந்த‌ அப்புதிய வேதியியல் பொருளுக்கு பொட்டாசியம் என்று பெயரிட்டார். அதற்குப் பிறகு ஒரு மாதத்தில் சோடியத்தையும் இதே போன்று தனிமைப்படுத்தினார். இவ்வாறு டேவி மிக முக்கியமான இரண்டு அடிப்படைக் கூறுகளைக் கண்டுபிடித்தார்.



உலகைப் புரட்டிப் போட்ட 100 அறிவியல் கண்டுபிடிப்புகள் - 28

28. அணுக்கள் (Atoms)

கண்டறிந்தவர்: ஜான் டால்டன் John Dalton

ஆண்டு: 1802

நவீன அறிவியலின் வேதியியல் மற்றும் இயற்பியல் பிரிவுகளில் அணுக்களின் பங்கு அளவிடற்கரியது. 1938களில் மின்னணு நுண்ணோக்கிகள் வரும்வரை யாரும் கண்ணால் அணுக்களைக் கண்டதில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பே அணுக்களைப் பற்றிய அறிவும் அதன் சிறப்பும் பயன்பாடுகளும் பற்றி மனித இனம் அறிந்திருக்கின்றது. ஜான் டால்டன் அணுக்களின் வரையறையை உருவாக்கி அணுக்களின் நிலையில் பல ஆராய்ச்சிகள் செய்ய‌ வழிகோலியிருக்கின்றார். எந்த ஒரு பொருளுக்கும் மிக நுணுக்கமான அடிப்படை அணு என்பதும் வெவ்வேறு அணுக்களைக் கொண்டு விதம் விதமாகக் கட்டப்பட்டதே நாம் இன்று உலகில் காணும் அத்தனை பொருட்களும் என்பதை நாம் அறிந்திருக்கின்றோம்.

வேதியியல் மற்றும் இயற்பியலைப் புரிந்து கொள்வதற்குச் சாவியாக அணுக்கள் பயன்படுத்தப்படுவதால் ஜான் டால்டனின் கண்டுபிடிப்பு அறிவியல் வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையாகக் கருதப்படுகின்றது. இதனால் அவரை நவீன இயற்பியலின் தந்தை என்று அழைக்கின்றோம். இனி எவ்வாறு ஜான் டால்டன் அணுக்களைப் பற்றிக் கண்டறிந்தார் என்று பார்க்கலாம்.

கி.மு. 5ம் நூற்றாண்டில் மிலெடஸின் லியோசிப்பஸும் (Leucippus of Miletus) அப்தேராவின் டெமோக்ரிடஸும் (Democritus of Abdera) கொள்கைநிலையில் ஒவ்வொரு துகளையும் இன்னும் சிறு துகளாக உடைத்துக் கொண்டே செல்லலாம் என்று கூறியிருக்கின்றார்கள். இறுதியில் அவ்வாறு உடைக்க முடியாத பொருளுக்கு அணு என்றும் பெயரிட்டனர். கலிலியோவும் நியூட்டனும் அதே பொருள்பட அணு என்ற பெயரைப் பயன்படுத்தியிருக்கின்றனர். ராபர்ட் பாய்லேவும் ஆண்டனி லவாய்ஸியரும் புதிய வேதிப் பொருட்களைக் கண்டறியும் போது கூறு (element) என்ற சொல்லைப் பயன்படுத்தினர். ஆனாலும் இவை அனைத்துமே சித்தாந்தத்தின் அடிப்படையில் அமைந்தவையே அல்லாமல் அறிவியல் பூர்வமாக கண்டுபிடிக்கப்படவோ அல்லது சோதனைகள் மூலம் நிரூபிக்கப்படவோ இல்லை.

1766ல் இங்கிலாந்து மான்செஸ்டரில் பிறந்த ஜான் டால்டன் குறைந்த பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் கொண்டிருந்தாலும், 20 ஆண்டுகளாக தாதுப்பொருட்களை ஆராய்ச்சி செய்வதிலும் பள்ளி/கல்லூரிகளில் மதப் பிரச்சாரம் செய்வதிலும் ஈடுபட்டார். இறுதியில் பிலாசபிகல் சொசைட்டியில் பல கட்டுரைகளையும் சமர்ப்பித்திருக்கின்றார். அவைகளுள் பாரோமீட்டர், தெர்மாமீட்டர், ஹைக்ரோமீட்டர், மழையளவு, மேகங்கள் உருவாக்கம், ஆவியாதல், காற்றுமண்டல ஈரப்பதம், உறை நிலை ஆகியவை அடக்கம். ஒவ்வொரு கட்டுரையும் புதிய கொள்கைகளையும் அக்காலத்தில் அறிந்திடாத ஆராய்ச்சி முடிவுகளையும் கொண்டிருந்தது.

இதனால் ஜான் டால்டன் மிகவும் பிரபலமானார். எனவே தனது முழு கவனத்தையும் அறிவியல் ஆராய்ச்சியின் பக்கம் திருப்பினார் டால்டன். 1801 வாக்கில் காற்று மண்டலத்திலிருந்து தனது கவனத்தை வேதிப் பொருட்களின் பக்கம் திருப்பினார். அவருக்கு வேதியியலில் எந்த முன் அனுபவமும் கிடையாது. இருந்தாலும் நம்பிக்கையுடன் அதிலேயே ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். அந்தச் சமயத்தில் 50 வேதிப் பொருட்கள் பட்டியலிடப்பட்டிருந்தன. அவை உலோகங்கள், வாயுக்கள், உலோகங்களல்லாதவை என்று வகை பிரிக்கப்பட்டிருந்தன. என்ன தான் பலவித பொருட்களைக் கண்டறிந்தாலும், விஞ்ஞானிகளால் எவ்வாறு உலகில் இருக்கும் பொருட்கள் மற்ற பொருட்களுடன் இணைந்து இன்னொரு பொருளாக உருவமெடுக்க முடிகின்றது? என்ற‌ அடிப்படைக் கேள்விக்குப் பதில் தெரியாமல் இருந்தது. எடுத்துக்காட்டாக, ஹைட்ரஜன் வாயுவும், ஆக்ஸிஜன் வாயுவும் இணைந்து நீர்த்துளியாக எப்படி உருவமெடுக்கின்றது? என்பது அறியாமல் இருந்தனர். மேலும் 1 கிராம் ஹைட்ரஜன் எவ்வாறு மிகத் துல்லியமாக 8 கிராம் ஆக்ஸிஜனுடன் மட்டும் இணைந்து வினை புரிகின்றது? இந்த அளவு அதிகமாகவோ குறைவாகவோ எப்போதுமே இருப்பதில்லையே ஏன்? போன்ற கேள்விகளுக்குப் பதிலறியாமல் விழித்துக் கொண்டிருந்தனர்.

டால்டன் அனைத்து வேதியியல் வினைபுரிதல்களையும் ஆராய்ந்து எவ்வாறு பொருட்கள் உருவாகும் போது அடிப்படைத் துகள்கள் நடந்து கொள்கின்றன என்று ஒரு பொது கொள்கையை உருவாக்க முயற்சித்தார். அவர் ஒவ்வொரு வேதிப் பொருளின் எடையையும் ஆராய்ந்து அவற்றில் இருக்கும் மூல காரணிகள் எவ்வாறு பொருளின் கட்டமைப்பில் பங்கு பெறுகின்றன என்று ஆராய்ந்தார். ஒரு ஆண்டு ஆராய்ச்சியின் பின்னர், ஒவ்வொரு பொருளும் அவற்றின் எடையின் கணித வீதத்தில் அமைவதாக முடிவு செய்தார். அவரது இந்த முடிவு ஏற்கனவே கண்டறிந்த வேதியியல் பொருட்களில் (காற்று, நீர், ஈதர் ... ) இருக்கும் மூலக் காரணிகளின் அளவை எளிதில் கண்டறியும் வண்ணம் இருந்தது.

இது அவரது வேதியியல் தத்துவத்தில் வெவ்வேறு மூலக்கூறு மற்றும் அணுக்களின் அமைப்புகளின் படம். (நன்றி விக்கிபீடியா)

டால்டனின் கொள்கைப் படி, ஒவ்வொரு வேதியியல் பொருளும் உடைக்கமுடியாத மிக நுண்ணிய துகள்களால் சரியான முறையில் அடுக்கப்படுவதால் உருவானதாகும். அவர் இத்துகள்களுக்கு கிரேக்கர்கள் இட்ட பெயரான ஆட்டம் (atom) என்ற பெயரையே இட்டார். இதன் மூலம் இச்சொல் வேதியியல் சிறப்புப் பொருள்படும் குறிச்சொல்லானது. ஒரு பொருளின் எல்லா அணுக்களும் ஒரே மாதிரியான ஒத்த பண்புகளையே கொண்டிருக்கும் எனவும், அவற்றை வேறொரு பொருளின் அணுக்களுடன் சரியான வீதத்தில் இணைத்தால் வேறொரு தெரிந்த பொருளாக உருவாக்க முடியும் என்றும் காட்டினார். ஒவ்வொரு பொருளும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் அணுக்களை மூலப் பொருட்களிலிருந்து கொண்டிருந்தன. அந்த எண்ணிக்கை வீதம் மாறுபடுவதே இல்லை. பொருளின் ஒவ்வொரு அடிப்படைத் துகளிலும் இந்த வீதம் மாறுபடாமல் இருப்பதையும் கண்டறிந்தார். எனவே நீரை H4O2 எனக் குறிப்பதைக் காட்டிலும் H2O என்று குறிப்பது எளிமையானது என்றும் இதே வீதத்திலேயே ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் அணுக்களைக் கொண்டிருக்கின்றது என்றும் அறிய வந்தது.

ஒவ்வொரு அணுவுக்கும் ஆங்கில எழுத்துகளைக் கொண்டு H, O போன்று குறியீடுகளின் மூலம் ஒவ்வொரு மூலப் பொருளையும் குறித்தார் டால்டன். இது தானே எங்களுக்கு வேண்டும் என்று அவரது ஆராய்ச்சி முடிவுகளையும், கண்டுபிடிப்புகளையும் மேற்கத்திய அறிவியல் உலகம் வாரி எடுத்துக் கொண்டது எனலாம். அவரது அணு சார்ந்த அறிவியல் கொள்கைகளை நாம் இன்றளவும் பயன்படுத்துகின்றோம் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகைப் புரட்டிப் போட்ட 100 அறிவியல் கண்டுபிடிப்புகள் - 27

27. மயக்கமருந்து (அனஸ்தீசியா) Anesthesia

கண்டறிந்தவர்: ஹம்ஃப்ரி டேவி (Humphry Davy)

கண்டறிந்த ஆண்டு: 1801

அக்காலத்தில் அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் வலி காரணமாகவே அறுவை சிகிச்சை செய்து கொள்ளாதவர்கள் அதிகம். மயக்கமருந்து கண்டுபிடிக்கப்பட்டதாலேயே பல உயிர்களை மருத்துவரீதியாகக் காப்பாற்ற முடிந்தது என்பதை யாரும் மறுக்கவே முடியாது. அத்தகைய மயக்க மருந்து எவ்விதம் யாரால் கண்டறியப்பட்டது என்று காணலாம்.

1846ல், Oliver Wendell Holmes என்பவரால் உணர்ச்சியற்ற எனும் பொருள் தரும் அனஸ்தீசியா எனும் கிரேக்க மொழிச் சொல் பயன்பாட்டுக்கு வந்தாலும், இந்த மயக்க மருந்து முறை என்பது பல மருத்துவர்களாலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கும் முன்பே செயல்பாட்டில் இருந்து வந்தது தான். முற்கால சீன மருத்துவர்கள் மூளைக்குச் செய்தி அனுப்பும் நரம்புகளை அக்குபஞ்சர் ஊசிகளின் மூலம் நிறுத்தி வைத்து அறுவை சிகிச்சையின் போது வலியேற்படாமல் தவிர்த்திருக்கின்றனர். ரோமானிய மற்றும் எகிப்திய மருத்துவர்கள் மாண்ட்ரகோரா எனும் செடியின் வேரை (மான்ட்ரேக்) பயன்படுத்தி நோயாளிகளை மயக்கமுறச் செய்திருக்கின்றனர். கோக்கோ இலைகளைக் கடித்து மென்று அதன் சாறைப் புண்களின் மீது துப்பி அதன் மூலம் வலியைக் குறைக்கச் செய்ததும் உண்டு.

19ம் நூற்றாண்டில் மூன்று வெவ்வேறு அறிவியலாளர்கள் நவீன அனஸ்தீசிய முறையைக் கண்டறிந்ததாகக் கூறினாலும், அதற்கு முன்பே ஹம்ஃப்ரி டேவி இம்முறையைக் கண்டறிந்து விட்டார். 

ஸ்காட்லாந்தில் சர் யங் சிம்ப்சன் க்ளோரோபார்ம் எனப்படும் மருந்தை பஞ்சில் முக்கி அதை நுகரச் செய்வதன் மூலம் மயக்க நிலையை எட்டச் செய்யும் முறையைக் கண்டறிந்தார். 1838ல் விக்டோரியா ராணி தனது ஏழாவது குழந்தையைப் பிரசவிக்கும் போது க்ளோரோபார்மைப் பயன்படுத்தும் வரை அந்த முறை பிரபலமடைந்திருக்கவில்லை. அதன்பின்னர் க்ளோரோபார்ம் வரலாற்றில் பல போர்களில் முக்கியமாக அமெரிக்க சிவில் யுத்தத்தின் போது பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

ஜார்ஜிய மருத்துவர் க்ராஃபோர்ட் லாங் ஈதரைப் பயன்படுத்தி வலியைக் குறைக்க முயற்சி மேற்கொண்டார். ஒரு நீதிபதியின் கழுத்துப் பகுதியில் அறுவை சிகிச்சையின் போது ஈதரைப் பயன்படுத்திச் சிறப்பாக அறுவை சிகிச்சையைச் செய்து முடித்தார். அந்த நீதிபதி எந்த ஒரு வலியையும் உணர முடியவில்லை. 1842ல் இதைச் செய்த லாங் இதை விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லை. இரண்டாண்டுகள் கழித்து பாஸ்டனில் வெல் எனும் பல்மருத்துவர் ஈதரைப் பயன்படுத்தி வலியைக் குறைப்பதை அறிந்து கொண்டார். ஆனாலும் அவர் அறுவைசிகிச்சையின் போது ஈதரைச் செலுத்தும் அளவைக் குறைத்ததால் விரைவிலேயே வலியால் நோயாளி துடித்து விட்டார்.

1845ல் போஸ்டனின் இன்னுமொரு பல்மருத்துவர் வில்லியம் மார்ட்டன் மீண்டும் ஈதரைப் பயன்படுத்தி அறுவை சிகிச்சையைச் செம்மையாகச் செய்து முடித்தார். அவரது மயக்கமருந்தாக ஈதரைப் பயன்படுத்தும் முயற்சி குறித்த கட்டுரைகளே பின்னர் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய மருத்துவர்கள் பலரும் ஈதரை முதன்மையான மயக்கமருந்தாகப் பயன்படுத்த ஆரம்பித்தனர்.

இவ்வாறு மூவர் மயக்கமருந்து குறித்துக் கண்டறிந்திருந்தாலும், ஹம்ஃப்ரி டேவி 1801 லேயே நைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனைக் கலந்து நைட்ரஸ் ஆக்சைடைக் கண்டறிந்து அதற்கு சிரிப்பூட்டும் வாயு என்று பெயரும் இட்டார். அதிகமாக அதை உட்கொண்டால் மயக்கமும் நேரிட்டதைக் கண்டறிந்த அவர், அதனை மருத்துவமனைகளில் நோயாளிகளின் வலியைக் குறைக்கப்பயன்படுத்தலாம் என்று குறிப்பும் எழுதி வைத்தார். 

யாரும் அதைக் கண்டுகொள்ளவில்லை என்றாலும் கூட டேவி தான் முதன்முதலில் நவீன மயக்கமருந்து குறித்த கண்டுபிடிப்பை நிகழ்த்தினார் என்பதே உண்மை.

வியாழன், ஏப்ரல் 12, 2012

பரிசாக் கிடைச்சதெலாம்...

திங்கஆகாத் தங்கத்துக்கு மதிப்பைப் பாரய்யா!
பொங்கும் அன்னபூரணியை மதிப்ப தாரய்யா?

வெளஞ்ச நெல்லைக் கூட்டிஅள்ளி வித்துப்பாத்தாலும்
வெலையில்லாக் கொடுமையை நான்என்னான்னு சொல்லுவேன்?

கடலுக்குள்ள முழுகுனாலும் மிதந்து வந்துடலாம்
கடனுக்குள்ளே முழுகுனதை நான்என்னான்னு சொல்லுவேன்?

கோமணந்தான் மிஞ்சிருக்கு இருப்பு வகையிலே
மத்ததெல்லாம் காத்திருக்கு அடகுக் கடையிலே


பரிசாக் கிடைச்சதெலாம் நட்டந் தானய்யா!
தரிசாப் போட்டாக்கூட லாபந் தானய்யா!

உரத்தால‌ தாய்ப்பாலுஞ் சாக்கடை யாச்சு
வெதவெதமா விதைபோட்டு மலடு மாச்சு

பேஞ்சுபேஞ்சு கெடுப்பதுவும் மழை தானய்யா
பேயாமாலே கெடுப்பதுவும் மழை தானய்யா!

இளைச்சு இளைச்சு ஒடம்பெலாம் ஓடாத்தேயுது
வளைச்சு வளைச்சு நிலமெல்லாம் வீடாமாறுது!

நேத்து வந்துகருங்காலி விலையைப் பேசுறான்
பெத்ததாயை வித்துப் போட்டா கேவலமய்யா!

திங்கள், ஏப்ரல் 09, 2012

கும்கி - 7

அண்ணா ஈங்கோர் அதிசயம் பாரேன்!
அழைத்தனள் கூவி செல்வனைச் செல்வி
அத்தோடு நின்றாளா? அவனைத் தேடியே
துள்ளி யோடினாள் மான் போலவே.

அலுவலகஞ் செல்லும் காலைப் பேருந்தில்
கடைசிப் படியில் ஒருகாலை வைத்து
ஒருகையால் கம்பியில் தொங்கிச் செல்வதாய்
பாவம் கும்கிக்குத் தலையெலாஞ் சுற்றிற்று.

பேசும் மண்புழு!
பேசும் மண்புழு!
மண்புழு! மண்புழு!
வளையுது பார்!
நெளியுது பார்!

நீர்நிறை புட்டியைத் தலைகீழாய்க் கவிழ்த்தால்
கழுத்து முட்டித் தடுமாறும் நீரெனச்
சொற்கள் தட்டித் திக்கி விழுந்தன!
செல்வனும் எட்டி அதிசயமாய்ப் பார்த்தான்!

மழலைகள் முகந்தனில் குதூகலம் கண்டு
பின்வந்த முருகையன் இதழ்களில் முறுவல்
மகிழ்வின் உச்சியில் இளக்கம் இயல்பன்றோ?
துளிர்த்தன‌ கண்ணீர் பூக்கள் ஆனந்தமாய்!

மேலே கருமையும் கீழே வெண்மையுமாய்
உடலெங்கும் வரிசையாய்க் கோர்த்த வளையங்கள்
தலையருகே சுணைக்கால் கொண்டு நகரும்
கும்கியைக் கண்கள் விலக்காமல் பார்த்தனர்!

செல்வனும் செல்வியும் ஆர்வமாய்ச் சேர்ந்து
குறுகுறு பார்வையில் துளைத்துச் செய்த
மண்புழு ஆராய்ச்சி தந்தது கும்கிக்குச்
சொல்லொணாக் கூச்சமும் படபட வெட்கமும்.

நன்றாய்ப் பார்ப்போமெனச் சூரிய ஒளியில்
சென்றே தொடர்ந்தனர் தமது ஆராய்ச்சியை!
கதிரவன் கதிரைத் தாங்குமோ மண்புழு?
காயத்தில் காயம் பெற்றே சுருண்டிடுமே?

போதும்! போதும்! என்னை விடுங்கள்!
கதிரவன் கதிரோ தணலாய்த் தகிக்குதே!
கதறிய கும்கியைக் காக்க எண்ணியே
நிழலுக்கு வந்தனர் மூவரும் விரைந்து!

யாது மறியாது செய்த பிழைபொறுப்பாய்!
தோழராய் எம்மை ஏற்றே மன்னிப்பாய்!
உனைப் பற்றி அறியா யெமக்குச்
சொல்வாயோ அறியும்படி கொஞ்சம் விளக்கமாய்?

கேட்டாள் அன்பது ததும்ப‌ச் செல்வி
விட்டால் வழியத் தயாராய் அணைகட்டி
அவள்கண் நின்ற கண்ணீரைக் கண்டதும்
உருகியது கும்கி! செறுமியது குரலை!

(தொடரும்)