ஞாயிறு, ஏப்ரல் 22, 2012

உலகைப் புரட்டிப் போட்ட 100 அறிவியல் கண்டுபிடிப்புகள் - 27

27. மயக்கமருந்து (அனஸ்தீசியா) Anesthesia

கண்டறிந்தவர்: ஹம்ஃப்ரி டேவி (Humphry Davy)

கண்டறிந்த ஆண்டு: 1801

அக்காலத்தில் அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் வலி காரணமாகவே அறுவை சிகிச்சை செய்து கொள்ளாதவர்கள் அதிகம். மயக்கமருந்து கண்டுபிடிக்கப்பட்டதாலேயே பல உயிர்களை மருத்துவரீதியாகக் காப்பாற்ற முடிந்தது என்பதை யாரும் மறுக்கவே முடியாது. அத்தகைய மயக்க மருந்து எவ்விதம் யாரால் கண்டறியப்பட்டது என்று காணலாம்.

1846ல், Oliver Wendell Holmes என்பவரால் உணர்ச்சியற்ற எனும் பொருள் தரும் அனஸ்தீசியா எனும் கிரேக்க மொழிச் சொல் பயன்பாட்டுக்கு வந்தாலும், இந்த மயக்க மருந்து முறை என்பது பல மருத்துவர்களாலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கும் முன்பே செயல்பாட்டில் இருந்து வந்தது தான். முற்கால சீன மருத்துவர்கள் மூளைக்குச் செய்தி அனுப்பும் நரம்புகளை அக்குபஞ்சர் ஊசிகளின் மூலம் நிறுத்தி வைத்து அறுவை சிகிச்சையின் போது வலியேற்படாமல் தவிர்த்திருக்கின்றனர். ரோமானிய மற்றும் எகிப்திய மருத்துவர்கள் மாண்ட்ரகோரா எனும் செடியின் வேரை (மான்ட்ரேக்) பயன்படுத்தி நோயாளிகளை மயக்கமுறச் செய்திருக்கின்றனர். கோக்கோ இலைகளைக் கடித்து மென்று அதன் சாறைப் புண்களின் மீது துப்பி அதன் மூலம் வலியைக் குறைக்கச் செய்ததும் உண்டு.

19ம் நூற்றாண்டில் மூன்று வெவ்வேறு அறிவியலாளர்கள் நவீன அனஸ்தீசிய முறையைக் கண்டறிந்ததாகக் கூறினாலும், அதற்கு முன்பே ஹம்ஃப்ரி டேவி இம்முறையைக் கண்டறிந்து விட்டார். 

ஸ்காட்லாந்தில் சர் யங் சிம்ப்சன் க்ளோரோபார்ம் எனப்படும் மருந்தை பஞ்சில் முக்கி அதை நுகரச் செய்வதன் மூலம் மயக்க நிலையை எட்டச் செய்யும் முறையைக் கண்டறிந்தார். 1838ல் விக்டோரியா ராணி தனது ஏழாவது குழந்தையைப் பிரசவிக்கும் போது க்ளோரோபார்மைப் பயன்படுத்தும் வரை அந்த முறை பிரபலமடைந்திருக்கவில்லை. அதன்பின்னர் க்ளோரோபார்ம் வரலாற்றில் பல போர்களில் முக்கியமாக அமெரிக்க சிவில் யுத்தத்தின் போது பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

ஜார்ஜிய மருத்துவர் க்ராஃபோர்ட் லாங் ஈதரைப் பயன்படுத்தி வலியைக் குறைக்க முயற்சி மேற்கொண்டார். ஒரு நீதிபதியின் கழுத்துப் பகுதியில் அறுவை சிகிச்சையின் போது ஈதரைப் பயன்படுத்திச் சிறப்பாக அறுவை சிகிச்சையைச் செய்து முடித்தார். அந்த நீதிபதி எந்த ஒரு வலியையும் உணர முடியவில்லை. 1842ல் இதைச் செய்த லாங் இதை விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லை. இரண்டாண்டுகள் கழித்து பாஸ்டனில் வெல் எனும் பல்மருத்துவர் ஈதரைப் பயன்படுத்தி வலியைக் குறைப்பதை அறிந்து கொண்டார். ஆனாலும் அவர் அறுவைசிகிச்சையின் போது ஈதரைச் செலுத்தும் அளவைக் குறைத்ததால் விரைவிலேயே வலியால் நோயாளி துடித்து விட்டார்.

1845ல் போஸ்டனின் இன்னுமொரு பல்மருத்துவர் வில்லியம் மார்ட்டன் மீண்டும் ஈதரைப் பயன்படுத்தி அறுவை சிகிச்சையைச் செம்மையாகச் செய்து முடித்தார். அவரது மயக்கமருந்தாக ஈதரைப் பயன்படுத்தும் முயற்சி குறித்த கட்டுரைகளே பின்னர் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய மருத்துவர்கள் பலரும் ஈதரை முதன்மையான மயக்கமருந்தாகப் பயன்படுத்த ஆரம்பித்தனர்.

இவ்வாறு மூவர் மயக்கமருந்து குறித்துக் கண்டறிந்திருந்தாலும், ஹம்ஃப்ரி டேவி 1801 லேயே நைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனைக் கலந்து நைட்ரஸ் ஆக்சைடைக் கண்டறிந்து அதற்கு சிரிப்பூட்டும் வாயு என்று பெயரும் இட்டார். அதிகமாக அதை உட்கொண்டால் மயக்கமும் நேரிட்டதைக் கண்டறிந்த அவர், அதனை மருத்துவமனைகளில் நோயாளிகளின் வலியைக் குறைக்கப்பயன்படுத்தலாம் என்று குறிப்பும் எழுதி வைத்தார். 

யாரும் அதைக் கண்டுகொள்ளவில்லை என்றாலும் கூட டேவி தான் முதன்முதலில் நவீன மயக்கமருந்து குறித்த கண்டுபிடிப்பை நிகழ்த்தினார் என்பதே உண்மை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக