திங்கள், ஏப்ரல் 09, 2012

கும்கி - 7

அண்ணா ஈங்கோர் அதிசயம் பாரேன்!
அழைத்தனள் கூவி செல்வனைச் செல்வி
அத்தோடு நின்றாளா? அவனைத் தேடியே
துள்ளி யோடினாள் மான் போலவே.

அலுவலகஞ் செல்லும் காலைப் பேருந்தில்
கடைசிப் படியில் ஒருகாலை வைத்து
ஒருகையால் கம்பியில் தொங்கிச் செல்வதாய்
பாவம் கும்கிக்குத் தலையெலாஞ் சுற்றிற்று.

பேசும் மண்புழு!
பேசும் மண்புழு!
மண்புழு! மண்புழு!
வளையுது பார்!
நெளியுது பார்!

நீர்நிறை புட்டியைத் தலைகீழாய்க் கவிழ்த்தால்
கழுத்து முட்டித் தடுமாறும் நீரெனச்
சொற்கள் தட்டித் திக்கி விழுந்தன!
செல்வனும் எட்டி அதிசயமாய்ப் பார்த்தான்!

மழலைகள் முகந்தனில் குதூகலம் கண்டு
பின்வந்த முருகையன் இதழ்களில் முறுவல்
மகிழ்வின் உச்சியில் இளக்கம் இயல்பன்றோ?
துளிர்த்தன‌ கண்ணீர் பூக்கள் ஆனந்தமாய்!

மேலே கருமையும் கீழே வெண்மையுமாய்
உடலெங்கும் வரிசையாய்க் கோர்த்த வளையங்கள்
தலையருகே சுணைக்கால் கொண்டு நகரும்
கும்கியைக் கண்கள் விலக்காமல் பார்த்தனர்!

செல்வனும் செல்வியும் ஆர்வமாய்ச் சேர்ந்து
குறுகுறு பார்வையில் துளைத்துச் செய்த
மண்புழு ஆராய்ச்சி தந்தது கும்கிக்குச்
சொல்லொணாக் கூச்சமும் படபட வெட்கமும்.

நன்றாய்ப் பார்ப்போமெனச் சூரிய ஒளியில்
சென்றே தொடர்ந்தனர் தமது ஆராய்ச்சியை!
கதிரவன் கதிரைத் தாங்குமோ மண்புழு?
காயத்தில் காயம் பெற்றே சுருண்டிடுமே?

போதும்! போதும்! என்னை விடுங்கள்!
கதிரவன் கதிரோ தணலாய்த் தகிக்குதே!
கதறிய கும்கியைக் காக்க எண்ணியே
நிழலுக்கு வந்தனர் மூவரும் விரைந்து!

யாது மறியாது செய்த பிழைபொறுப்பாய்!
தோழராய் எம்மை ஏற்றே மன்னிப்பாய்!
உனைப் பற்றி அறியா யெமக்குச்
சொல்வாயோ அறியும்படி கொஞ்சம் விளக்கமாய்?

கேட்டாள் அன்பது ததும்ப‌ச் செல்வி
விட்டால் வழியத் தயாராய் அணைகட்டி
அவள்கண் நின்ற கண்ணீரைக் கண்டதும்
உருகியது கும்கி! செறுமியது குரலை!

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக