வியாழன், ஆகஸ்ட் 25, 2011

மரண ஓலை

போரென்றால் இதுவெனக் களமொன்று சிவந்தது
தோளென்றால் இதுவெனத் தினவெடுத்து ஒருவீரன்
தேரொன்றில் போரிட்டான் எனக்கென - இறுதியில்
யாரென்று அறியாமல் மாய்த்திட்டான் என்னையே.

குற்றம் நீக்கிச் செல்லும் செல்லது
புற்றாய் மாறிப் பாழுயிர் பறிக்குது
சுற்றும் உதிரம் முற்றாய் நிற்குது
வெற்றுக் கூடாய் மெய்யும் உதிருது

யாரவர் சொன்னவர் அகத்தழகு முகத்திலென;
சொன்னது தவறெனக் காட்டும் முகமாய்
சோகமோ மகிழ்வோ காணவியலா முகங்கொண்டு
தந்திட்டார் மருத்துவர் என்னிடம் தாளொன்று.

முட்டுச்சுவர் முட்டித்தலை தட்டி வீழ்ந்ததுபோல்
தடைகளே பாதைகளாய் முன்வந்து நின்றதுபோல்
எற்றமுடியாப் புற்றுநோயெனத் தாளில் கிறுக்கல்கள்
தாளல்ல மரணஓலை; அனுப்பியவன் காலன்.

வண்டிக்குச் சீட்டும் இடமும் கிடைத்திடின்
மண்டிடும் மகிழ்வு நெஞ்சகக் கூட்டினில்;
கண்டிடும் காலச்சீட்டு கையில் கிடைத்திடின்
சுண்டிடும் முகமும் சுருண்டிடும் மனமும்.

ஒருநாளாய் இருநாளாய் ஒருவாரமுந் தொலைந்தது
தெருவெங்கும் சோகத்தில் அலைந்ததாய்த் தெரிந்தது
துருதுருவுடல் துருவாகி நொறுங்கியே நொந்தது
கருவறைக் கடவுளுக்குஞ் சாபம் கிடைத்தது.

மரணம் வரும்வரை நித்தம் மரணமோ?
இன்மை நினைத்து இருப்பைத் தொலைக்கவோ?
பொறுக்காமல் வலிபொறுத்துக் கண்ணீர் விழுங்கி
சறுக்காமல் புன்னகை ஆயுதம் ஏந்தினேன்.

மறக்காது ஓலையிட்ட காலனோ மாறினன்
நண்பனாய் அடிக்கடி என்னுடன் பேசினன்
வாழ்க்கையில் உனக்குப் புதையல் உண்டோ?
வாழ்க்கையே உனக்குப் புதையல் என்றனன்!

புதைப்பதிலே குறியாய் இருக்கின்றா யென்றேன்
குபீரெனக் கைதட்டிச் சிரித்தனன் காலதேவன்
கட்டமின்றி யொருபத்தே நாளென்று குறித்து
இட்டமாயிரு வென்று கைகொடுத்து நீங்கினன்.

ஈகொசு நாய்பூனை பன்றியெறும்பு கரப்பான்
பல்லிபூரான் வீடும் பாதையொடு மரமும்
சுற்றவே உதவிய காலணியும் சுற்றமும்
கற்றதும் நட்பெனப் பெற்றதும் பகையும்

அன்னையும் பிதாவும் அண்ணன் தங்கை
அக்காளொடு தம்பியும் விண்ணும் மண்ணும்
அண்டமும் அகிலமும் என்னதான் ஆகுமோ
இருகண்ணும் திறவாது மூடுகையில் என்றே

நினையாது நிறைந்தேன் அமைதியில் ஆழ்ந்தேன்
சாநாள் அறியா தலைந்திடும் மானிடரே
வாநாள் அறிந்தயா னுரைக்குமொழி கேளீர்
வாநாள் வரைசாகா(து) சாநாள் வரை வாழுமே!

2 கருத்துகள்:

  1. வெகு நாட்களுக்குப் பின்பு
    ஒரு அருமையான படைப்பைப் படித்த திருப்தி
    வார்த்தைகளும் உணர்வுகளும் மிக இயல்பாய்
    கை கோர்த்து கவிதையில் களி நடனம் புரிகின்றன
    அருமையான பதிவு.வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு