வெள்ளி, அக்டோபர் 07, 2011

தசாவதாரம்

தாய்மண் தந்தைவே ரெனத்தவமாய் நின்றோர்
பாய்மரப் பயணவாழ்வில் நம்முடன் பிறந்தோர்
சேய்மழலை களிக்கச் சுகவரமாய் வந்தோர்
வேய்பந்தற் காலெனத் தாங்கிடுஞ் சுற்றோர்...பாசமாய்

நினைத்ததை நினைக்குமு னியல்பினில் நினைப்பவர்
பனைத்துணைப் பங்கம்வரி னும்பக்கமே நிலைப்பவர்
அனைத்தையும் பொறுக்கும் பூமியாய் நடப்பவர்
சுனைநீராய்த் தாகத்தில் தவிக்கையில் சுரப்பவர்...நேசமாய்

பயிருக்குக் கதிராய்ப் பரவிடு நினைவாய்
மயிலுக்குத் துணைநடம் பயின்றிடு மழகாய்
வெயிலுக்கு நிழலாய் கரம்பிடி யிணையாய்
உயிருக்கு உயிராய் உவந்திடு மினிப்பாய்க்... காதலாய்

நிறுத்திடும் முள்ளா யிருபுறந் தாங்கும்
உறுத்திடும் உறவும் பழித்திடும் பகையும்
பொறுத்திடும் சமமாய்ச் சகமாய் வைத்திடும்
அறுத்திடும் அவத்தை தவத்தால் வறுத்திடும்...நீதியாய்

அளவிடப் பெரிதோ அணுவிலுஞ் சிறிதோ
குளவியாய்க் கொட்டுமோ குலவிடத் தடவுமோ
குளம்வளர் மீன்களோ வனம்வளர் மான்களோ
வளம்பெற வரையிலா துயிர்தனைக் காத்திடும்...பரிவாய்

சான்றோர் சாகாக் கல்வியிற் சிறந்தோர்க்கும்
ஆன்றோர் அனுபவச் சாறதைப் பகிர்ந்தோர்க்கும்
வான்போ லுயரத் தேனீயா யுழைப்போர்க்கும்
கோன்முறை தவறாது ஆட்சி புரிவோர்க்கும்...பணிவாய்

கூர்கொண்ட பார்வை தெறித்திடும் வியர்வை
நேர்கொண்ட தூய்மை வாய்த்திடும் வாய்மை
சீர்கொண்ட கலையாய்த் தேர்ந்திடும் நுட்பமொடு
ஊர்கண்ட முதல்வராய் முனைப்பொ டுழைக்குந்...திறமாய்

முடியாதது முடித்து முடிந்ததைக் கொடுத்து
விடியலைக் காட்டும் பகலவராய்ப் பரிமளித்து
துடிப்புடன் தியாகத் தீபமெனத் தரணியில்
நடிப்பிலாது வாழ்ந்து நாடெலாஞ் செழிக்கும்...அறமாய்

கொடுக்கக் குறையாது எடுக்க நிறையாது
விடுக்க முடியாது தடுக்கவுந் தடையேது
தொடுக்கத் தொடரும் மரபாய்ப் பயனுற
மடுமலை ஒன்றாய்ச் சேர்க்குங் குருகுலக்...கல்வியாய்

ஆதியாய் அந்தமாய் ஆதியின்றி யந்தமின்றிச்
சோதியாய் வேதமாய் போதமாய் நாடியாய்
நாதியாய் நாதமாய் விநோதமாய் வாய்கொண்டு
ஓதிடத் தோதிலா முழுநிறை முதலிடம்...பக்தியாய்

பாசமாய் நேசமாய் காதலாய் நீதியாய்
பரிவாய் பணிவாய் திறமாய் அறமாய்
கல்வியாய் பக்தியாய் பத்தாப் பத்துமாய்
பல்வடி வெடுக்கும் பாரெங்கும் அன்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக