வெள்ளி, அக்டோபர் 28, 2011

குப்பை


யேசு புத்தனொடு லட்சுமியும்
சரஸ்வதியும் படமாய் இருந்தாலும்
கசக்கும் வரை காகிதம் அது
கசக்கிவிட்டால் குப்பை அதன்பெயர்.
தானே போட்டதைத்
தானே தொடக்கூட
அத்தனை அவமானம்!

எதைப் போட்டாலும்
பகாசுரனாய் வாங்க
வயிறு வீங்க
ஊரெங்கும் மூலையில் குப்பைத் தொட்டிகள்!
பாவம் எவளோ எவனோ பெற்றெடுத்த
தங்கத்தைக் காக்கும் கருவறைப் பெட்டிகள்!

நம்வீட்டுப் பக்கம் மட்டும்
வேண்டாம் இத்தொட்டி எனும்
தாராளம் கொண்டோர் உள்ளே!
கிரிக்கெட்டு வீரர்களாய் மாறி வீசும்
நெறிகெட்ட மாந்தர் தோற்றதால்
கசடுகள் கிடக்கும் வெளியே!

தீக்கொண்டு எரித்தாலோ காற்றுக்கும் கேடு
ஓரிடத்தில் குவித்தாலோ நீர்நிலைக்கும் கேடு
முழங்காலுக்கும் முழந்தாளுக்கும் முடிச்சுப் போட்டு
வைக்கின்றோம் பூமியைச் சிதறடிக்குமோர் வேட்டு!

காந்திபடம் கொண்டு தாளிருந்தால்
சீந்தாது போட மனம்வருமோ?
எத்தாளும் செல்வமெனும் புத்தி
எப்போது வருமோ நமக்கெலாம்?

தாவரக் கழிவோ மண்ணுக்கு உரமாம்!
காகிதக் கழிவோ உலைகட்குத் தரமாம்!
பிளாஸ்டிக் கழிவோ சுழன்றிடும் வரமாம்!
மீதியுள்ள கழிவோ மிகமிகக் குறைவாம்!

சுமையென்று கருதாது சுகமென்று கருதித்
தரம்பிரித்துச் சேர்த்துத் தக்கவர்க்குத் தரவே
செல்வமாம் இதற்கு ஈடிணை உண்டோ?

சிந்தித்து உணர்ந்து உறுதியாய் முடிவெடுப்போம்!
ஒழிக்க வேண்டியது குப்பையை அல்ல!
குப்பைத் தொட்டியென்றே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக