சனி, அக்டோபர் 29, 2011

'௭' வது அறிவு - என் பார்வையில்...




சமீபத்தில் தீபாவளி பண்டிகையின் போது மிகவும் எதிர்பார்ப்புடன் வெளிவந்திருக்கும் படங்களில் ஒன்று 'எ'-வது அறிவு.

தமிழகத்தில் இருந்து சீன தேசம் சென்று அங்கே தனது மருத்துவ மற்றும் வீரதீரத் திறமைகளை வெளிக்காட்டியதால் இன்றளவும் தெய்வமாகப் போற்றப்படும் போதிதர்மாவைச் சுற்றியே கதை செல்கின்றது.

போதிதர்மா அங்கே யாராலும் குணப்படுத்த முடியாத வைரஸுக்கு மருந்தை எளிதில் கண்டுபிடித்துப் பலரைக் காப்பாற்றுகின்றார். அந்த ரகசியத்தையும் அவர்களுக்குக் கற்றுத் தருகின்றார். மேலும் தற்காப்புக்கலையையும் கற்றுத் தருகின்றார்.

போதிதர்மாவைப் பல தேசங்கள் போற்றினாலும், அவரது தேசமான இந்தியாவிலும் தமிழகத்திலும் சுத்தமாக மறந்து போயினர். அதைச் சாதகமாகப் பயன்படுத்தி இப்போது சீனா அதே வைரஸைக் கொண்டு நோயைப் பரப்பி தங்களிடம் இருக்கும் மருந்து ரகசியத்தைக் கொண்டு இந்தியாவை அடிமைப்படுத்த நினைக்கின்றது.

போதிதர்மாவின் டி.என்.ஏ. மூலக்கூறும், அவரது சந்ததியில் வந்திருக்கும் சூரியாவின் மூலக்கூறும் ஒத்துப் போக, தனது ஜெனிடிக் ஆராய்ச்சியின் மூலம் ஸ்ருதிஹாசனால் மீண்டும் சூரியாவைக் கொண்டு போதிதர்மாவை உருவாக்க முடிந்ததா? நோய்க்கு மருந்து கண்டறிய முடிந்ததா என்பதே கதை.

ஏற்றுக் கொண்ட பாத்திரத்துக்குக் கச்சிதமாகப் பொருந்துகின்றார் சூரியா. படம் முழுவதும் ஆங்காங்கே இயக்குனர், கேமராமேன், கிராபிக்ஸ் நிபுணர் மற்றும் இசையமைப்பாளரின் கைவண்ணம் தெரிகின்றது.

வெறும் அழகு பொம்மையாய் மட்டும் வலம் வராமல் கதையின் முக்கியக் கதாபாத்திரமாக உலா வருவதும் தமிழைத் தாங்கிப் பிடிக்கும் வசனங்களைப் பேசுவதும் (சுத்தத் தமிழில் பேசாவிட்டாலும் சொந்தக் குரலில் பேசியது வரவேற்கத்தக்கது) ஸ்ருதி ஹாசனுக்கு நல்ல அறிமுகமாகவும் தந்தையின் பெயரைக் காப்பாற்றுவதாகவும் இருக்கின்றது. இருந்தாலும் தந்தையின் இடத்தைப் பிடிக்கவேண்டுமானால் இன்னும் அவர் எவ்வளவோ உழைக்கவேண்டும்.

எல்லா அறிவியல் சார்ந்த தமிழ்ப் படங்களைப் போலவே இதிலும் சில லாஜிக் ஓட்டைகள் இருக்கின்றன. பட்ஜெட், நம் வசம் இருக்கும் தொழில்நுட்பம், நமக்கிருக்கும் கால அவகாசம், சந்தை ஆகியவற்றை மனதில் கொண்டு அவற்றையெல்லாம் மறந்து விடலாம். தவறில்லை.

வித்தியாசமான கதை, சிறந்த கலைஞர்கள் என்று சேர்ந்து உருவாக்கியிருந்தாலும், படத்தில் ஏதோ ஒன்று மிஸ்ஸிங். அது தான் 'எ' வது அறிவு. அது என்ன ஏழாவது அறிவு என்று கடைசி வரை நமது யூகத்திலேயே விட்டு விடுகின்றார்களா அல்லது எனது ஆறாவது அறிவு கொண்டு தான் கண்டறிய முடியவில்லையோ தெரியவில்லை.

+ பாயிண்ட்ஸ்

குத்தாட்டம், கவர்ச்சி நடனம், காமெடி என்றில்லாமல் கதையோடு சீரியஸாக ஒன்றியே படத்தை நகர்த்திச் சென்றிருப்பது.
சூரியா, ஸ்ருதிஹாசனின் ஆர்வமான நடிப்பு
ஸ்ட்ராங்கான கதை
இன்றைய அறிவியலோடு பழைய வரலாறையும் மறக்கக் கூடாது எனும் மெசேஜ்
வித்தியாசமான வில்லன்

- பாயிண்ட்ஸ்

பாடல்களும் சரி, பாடல்காட்சிகளும் சரி படத்துக்குச் சற்றும் பொருந்தவில்லை. இரண்டு பாடல்களைத் தவிர. ஒன்று சோகப்பாடல். இன்னொன்று உத்வேகப்பாடல். மற்ற பாடல்களைப் படமெடுத்த விதமும், சொற்களே புரியாமல் எழுதியிருப்பதும் தமிழைத் தாங்க நினைக்கும் படத்தின் மையக்கருத்துக்கு ஒத்துப் போகவே இல்லை! இதனாலேயே பாடல்களும் மனதில் ஒட்ட மறுக்கின்றன.
சண்டைக்காட்சிகளில் குறிப்பாக வில்லன் சூரியா மற்றும் ஸ்ருதிஹாசனைக் கொல்லப் பலரையும் ஏவும் போது வழக்கமான தமிழ்ப்படங்களின் சண்டைக்காட்சிகள் போலவே அமைத்திருப்பது.
சூரியா, ஸ்ருதிஹாசன் மற்றும் வில்லனைச் சுற்றியே கதை நகர்வதால் யார் வருகின்றார்கள் யார் போகின்றார்கள் என்றே அறிந்து கொள்ள முடியாத பல கதாபாத்திரங்கள்.

அதிக எதிர்பார்ப்பு ஏதுமின்றி இந்தப் படத்தைக் காணச் சென்றால் வித்தியாசமான தமிழ்த் திரைப்படத்தைக் கண்ட திருப்தியைப் பெறலாம்.

மற்றபடி ஏழாவது அறிவு அப்படியொன்றும் எட்டாத அறிவு அல்ல!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக