புதன், அக்டோபர் 26, 2011

என்றென்றும் தீபாவளி!


என்றென்றும் தீபாவளி!

என்றும் போல்...
இவள் தான் விடியலை வென்றாள்;
இவளுக்குத் தினமும் கங்கா ஸ்நானம்.

இன்று வந்த அறுவைத் திரைப்படத்தை
அறுவை சிகிச்சை செய்யும் நடிகர் பட்டாளம்;
வாயில் ஈயோட தேனோட யாவரும் பார்த்திருக்க
இவளுக்கோ அடுப்படியில் வியர்வை மழை!

மெத்தென்று சுட்டுவைத்த செம்பொன் உளுந்துவடையும்
தித்திக்கும் வாயில் போடுமுன் கரையும் பணியாரமும்
இவளுக்கே வழிவழியாய் வந்து வாய்த்த அணியாரம்!

புத்தாடை மினுமினுக்கக் குதூகலச் சிரிப்புக்கும்
மத்தாப்புத் தெறிக்கும் தீப்பொறிக்கும் போட்டி
ஆபத்தை நினைத்து இவளுக்கு மட்டும்
எண்ணெயிட்ட கடுகாய்ப் பதறும் மனம்.

என்றோ ஒழிந்த அரக்கனுக்காய்க் கொண்டாட்டம்
என்றென்றும் இவளின்பாடு இங்கே திண்டாட்டம்
தீமை ஒழிந்ததைக் கொண்டாடும் மாந்தரே
நன்மை வளர்வதைக் கொண்டாடுவது எப்போது?

நரகாசுரன் அழிவது ஓர்நாள் தீபாவளி!
இவள்போல் தாய்மையைக் கொண்டாடி
தியாகச் சுடர்களை ஒளிவிடச் செய்தால்
என்றென்றும் தீபாவளி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக