செவ்வாய், செப்டம்பர் 17, 2013

உலகைப் புரட்டிப் போட்ட 100 அறிவியல் கண்டுபிடிப்புகள் - 37. கிருமி (Germ Theory)

கண்டறிந்தவர்: லூயி பாஸ்டர்

படம்

காலம்: 1856

பால், தயிர் போன்ற உணவுப் பொருட்கள் ஓரிரு நாட்களில் கெட்டுப் போகின்றன. மாமிசமும் அவ்வாறே கெட்டுப் போகின்றது. இதனால் பால் பொருட்களை கறந்தவுடன் உட்கொள்ள வேண்டிய கட்டாய நிலை இருந்தது. இதன் காரணமாக மாடு, ஆடு போன்றவற்றின் அருகிலேயே மனிதர்கள் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. அப்போது தான் ஆபத்பாந்தவனாக உலகுக்கு வந்து சேர்ந்தார் லூயி பாஸ்டர். காற்றில் கலந்திருக்கும் கண்ணுக்குப் புலனாகாத, தொட்டறிய முடியாத நுண்ணுயிரிகளே பல வியாதிகளுக்கும் உணவுப் பொருட்கள் கெட்டுப் போவதற்கும் காரணம் என்பதைக் கண்டறிந்தார் லூயி பாஸ்டர். அது மட்டுமா? பானங்களில் இருந்து நுண்ணுயிரிகளை நீக்கும் எளியவழியான பாஸ்டரைஷேஷன் எனும் பத‌முறையைக் கண்டறிந்து உலகுக்குத் தந்தார்.

எவ்வாறு கண்டறிந்தார்?

1856ல், 38 வயதான லூயி பாஸ்டர் பாரிஸ் நகரில் புகழ்பெற்ற Ecole Normale பல்கலையில் தனது அறிவியல் பிரிவில் நான்காவது ஆண்டாக இயக்குநராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அது ஒரு மதிப்புமிக்க நிர்வாகப் பொறுப்பாகும். ஆனால் அவரது உள்ளமோ அறிவியல் ஆராய்ச்சியை நாடியது. அதுமட்டுமின்றி அவர் விஞ்ஞானிகளின் மேல் மிகுந்த கோபமும் கொண்டிருந்தார். பல விஞ்ஞானிகள் நுண்ணுயிரிகளுக்கென்று தாய் தந்தை கிடையாது என்று நம்பினார்கள். அதற்குப் பதிலாக அவை உணவுப் பொருட்கள் சிதைவுறும் போது தானாகவே உருவாகி உணவுப் பொருட்களைக் கெடுக்கின்றன என்று நம்பிக்கை கொண்டிருந்தார்கள். Felix Pouchet எனும் அறிஞர் அவ்விஞ்ஞானிகளின் கருத்தை மையமாகக் கொண்டு ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

பாஸ்டருக்கோ அவ்வறிக்கை குப்பைக்குச் சமமானது என்று தோன்றியது. நுண்ணுயிரிகள் (பாக்டீரியாக்கள்/ஈஸ்டுகள்) எல்லா இடத்திலும் ஏற்கனவே பரவியிருக்கின்றன என்று பாஸ்டர் ஏற்கனவே கண்டறிந்திருந்தார். எனவே ஏன் இந்த நுண்ணுயிரிகள் எதேச்சையாக உணவின் மீது வந்து விழுந்து சிதைவுறும் உணவையே தங்கள் உணவாக உட்கொண்டு பல்கிப் பெருகக் கூடாது என்று சந்தேகம் கொண்டார் பாஸ்டர்.

இரண்டு கேள்விகள் இவ்விவாதத்தில் முக்கியமானவையாகக் கருதப்பட்டன. முதலாவதாக, உண்மையிலேயே நுண்ணுயிரிகள் காற்றில் மிதந்து பறக்கின்றனவா? இரண்டாவதாக நுண்ணுயிரிகளே இல்லாத அல்லது செயற்கையாக நீக்கப்பட்ட சுத்தமான இடத்தில் நுண்ணுயிரிகள் தாமாகவே உருவாக வாய்ப்பிருக்கின்றதா?

பாஸ்டர் ஒரு கண்ணாடிக் குழாயையும் அதனுள் இருக்கும் காற்றையும் வெப்பப்படுத்திக் கிருமிநீக்கம் (sterilize) செய்தார். பின்னர் அக்குழாயின் வாயில் பஞ்சை வைத்து அடைத்தார். பின்னர் ஒரு உறிஞ்சு குழல் மூலம் அந்தப் பஞ்சின் வழியே கிருமிநீக்கம் செய்யப்பட்ட காற்றை உறிஞ்சினார். இப்போது பஞ்சின் ஒரு பக்கத்தில் நுண்ணுயிரிகள் இருக்கின்றன. மற்றொரு பக்கத்தில் நுண்ணுயிரிகள் ஏதுமில்லை. பஞ்சின் வெளிப்பக்கத்தில் காற்றில் பரவும் நுண்ணுயிரிகள் பட வாய்ப்பு இருக்கின்றது. மற்றொரு பக்கத்தில் தானாக நுண்ணுயிரிகள் உருவானால் மட்டுமே இருக்க வாய்ப்பிருக்கின்றது.

24 மணி நேரம் கழித்துப் பார்த்த போது பஞ்சின் வெளிப்பக்கப் பகுதியில் அதிகமான நுண்ணுயிரிகள் இருந்தன. அதே சமயத்தில் குழாயின் உட்புறப்பகுதியில் நுண்ணுயிரிகளே காணப்படவில்லை. இதன் மூலம் முதல் கேள்விக்குப் பதில் கிடைத்தது. ஆம் நுண்ணுயிரிகள் காற்றில் பரவிக் கிடக்கின்றன. ஏதாவது ஓரிடத்தில் அவை சேரும் போது அவை பல்கிப் பெருக ஆரம்பிக்கின்றன.

இரண்டாவது கேள்விக்கு வருவோம். நுண்ணுயிரிகள் தாமாகவே உருவாவதில்லை என்று பாஸ்டர் நிரூபணம் செய்ய வேண்டியிருந்தது.

பாஸ்டர் ஒரு நீளமான வளைந்த கழுத்துடைய கண்ணாடிப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டார். அதில் பாக்டீரியாவுக்கு சுவைத்து உண்ணக் கூடிய பான‌த்தை வைத்து அதைச் சூடாக்கினார். அதிகச் சூடு படுத்தியதால் கண்ணாடி ஒளிர ஆரம்பித்தது. உள்ளிருக்கும் பானமும் கொதிக்க ஆரம்பித்தது. இதனால் உள்ளிருக்கும் நுண்ணுயிரிகள் கொல்லப்பட்டு விட்டன. உடனடியாக அவர் அப்பாத்திரத்தை மூடி வைத்து விட்டார். இனி அப்பாத்திரத்துக்குள் நுண்ணுயிரிகள் தானாகவே உருவானால் தான் உண்டு. பின்னர் அப்பாத்திரத்தை மிதமான சூட்டில் வைத்தார் பாஸ்டர். நுண்ணுயிரிகளுக்கு மிதமான சூடென்றால் கொண்டாட்டம். வேகமாகப் பரவி வளரும்! 24 மணி நேரம் கழித்து பாஸ்டர் பாத்திரத்தைச் சோதித்தார். அப்போதும் எந்த நுண்ணுயிரியும் காணப்படவில்லை! அது போன்று எட்டு வாரங்களுக்கு அப்பாத்திரத்தைத் தொடர்ந்து கண்காணித்தார். என்ன ஆச்சரியம்! எந்த ஒரு நுண்ணுயிரியும் காணக் கிடைக்கவில்லை. பாக்டீரியா தானாக உருவாகவில்லை. நீளமான கழுத்தைக் கொண்டிருந்த அந்தப் பாத்திரத்தின் கழுத்தை உடைத்து சாதாரண காற்று உட்புகவிட்டார் பாஸ்டர். ஏழு மணிநேரத்தில் முதல் பாக்டீரியாவை அவரால் கண்டறிய முடிந்தது. 24 மணி நேரத்திலேயே பதார்த்தத்தின் மேல்பகுதி முழுவதும் நுண்ணுயிரிகளால் ஆளப்பட்டு விட்டது!

இதன் மூலம் Pouchet அறிக்கை தவறென்று நிரூபணமானது. சாதாரண காற்றின் தொடர்பில்லாத போது நுண்ணுயிரிகளால் பாதிக்கப்பட வாய்ப்பில்லாமல் போகின்றது. அவை தானாக உருவாவதில்லை. பாஸ்டர் மகிழ்வுடன் தனது கண்டுபிடிப்பை வெளியிட்டார். நுண்ணுயிர் அறிவியல் எனும் மைக்ரோ பயாலஜி பிரிவு அறிவியலில் உருவாக பாஸ்டர் காரணமானார்.

நுண்ணுயிரிகளினின்று எவ்வாறு உணவுப் பொருட்களைக் கெடாமல் பதப்படுத்துவது என்றும் செய்து காட்டினார். இன்றளவும் அவ்வழிமுறை பயன்படுத்தப்படுவதை நாம் அறிவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக