புதன், செப்டம்பர் 18, 2013

உலகைப் புரட்டிப் போட்ட 100 அறிவியல் கண்டுபிடிப்புகள் - 38. பரிணாம விதி

38. பரிணாம விதி (The Theory of Evolution)

கண்டறிந்தவர்: சார்லஸ் டார்வின் (Charles Darwin)



கண்டறிந்த ஆண்டு: 1858

டார்வினின் பரிணாம விதியும் அதனோடு இணைந்த வல்லது பிழைக்கும் எனும் தத்துவமும் உலகின் அடிப்படை உயிரியல் தத்துவமாகக் கருதப்படுகின்றன. 155 ஆண்டுகள் கடந்தாலும் இன்றும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாகவும் செடி கொடிகள் மற்றும் உயிரினங்களின் வரலாற்றைச் சொல்வதாகவும் இவ்விதி இருக்கின்றது. உயிர்களின் இருப்பையும் அமைப்பையும் கேள்விகளாக்கினால் எங்கு தேடினும் கிடைக்காத பதில்களைக் கொண்டு வந்து டார்வினின் கண்டுபிடிப்பு சேர்த்தது. உயிர்களின் வகைகளையும், அவற்றின் வழித்தோன்றல்களையும் அது விளக்குவதாக இருக்கின்றது. பலவித எதிர்ப்புகளையும் தடைகளையும் தாண்டி அவரது பரிணாம விதியைப் போலவே வல்லது பிழைக்கும் என்ற வகையில் இன்றும் வல்லதாக இருக்கின்றது. அதற்கு வலிமை சேர்ப்பதாக கடந்த 155 ஆண்டுகளில் மலையளவு அறிவியல் சாட்சியங்கள் கிடைத்திருக்கின்றன.

இனி டார்வின் இவ்விதியை எவ்வாறு கண்டறிந்தார் என்று காணலாம்.

1827ல் தேவாலயப் பணியில் சேரவேண்டும் என்ற எண்ணத்தோடு அக்கல்வி பயில்வதற்காக 1827ல் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இணைந்தார் சார்லஸ் டார்வின். அங்கு மரபியல் மற்றும் தாவரவியல் பக்கம் தன் பார்வையைத் திருப்பினார். 1831ல் தன் 22வது வயதில் பட்டதாரியாக வெளிவந்த டார்வின் ஒரு இயற்கையாளராக பீகிள் எனும் கப்பலில் தென்னமெரிக்கா மற்றும் பசிபிக் நோக்கிய‌ தனது கடல் பயணத்தைத் தொடங்கினார். அது மூன்றாண்டுப் பயணம். ஆனாலும் ஐந்தாண்டுகளுக்கு நீடித்தது. தனது பயணத்தில் தான் கண்ட வகை வகையான, ரகம் ரகமான, வண்ண வண்ணமான பலப் பல உயிரினங்களைக் கண்டு பிரமித்து வியந்து அதிசயித்துப் போனார்!

பசிபிக் பெருங்கடலில் இருக்கும் காலாபகாஸ் தீவுகளில் அவர்கள் நீண்ட காலம் தங்கியது தான் அவரது பிரமிப்பை ஒரு கண்டுபிடிப்பாக உருமாற்றியது. முதல் தீவான சாத்தம் தீவில் இரண்டு விசித்திர வகை ஆமைகளைக் கண்டார் டார்வின். அவற்றில் ஒன்றின் கழுத்து நீளமாக மரங்களின் இலையை எட்டிச் சாப்பிடும் அளவுக்கு இருந்தது. மற்றொன்றின் கழுத்து குறுகியதாக செடிகளின் இலைதழைகளைச் சாப்பிடுவதாக இருந்தது. மேலும் ஐரோப்பாவில் சாதாரணமாகக் காணக் கிடைக்கும் மஞ்சள் நிறப்பறவைகளையும் (finches) அங்கு அவர் கண்டார். ஆனால் அவற்றின் அலகுகள் ஐரோப்பியப் பறவைகளைக் காட்டிலும் வெகுவித்தியாசமாக இருக்கக் கண்டார்.

பீகிள் கப்பல் மூன்றாவது தீவான ஜேம்ஸ் தீவை அக்டோபர் 1835 வாக்கில் அடைந்தது. அங்கு மிகச் சரியாக நிலநடுக்கோட்டில் தட்ப வெப்ப நிலை ஆண்டு முழுதும் அதிக மாற்றமில்லாது இருக்கக் கண்டார். அவர‌து பின்பையில் இருந்த ஜாடிகளுக்குள் கணக்கிலடங்கா மாதிரிகள் நிரம்பி வழிந்தன. ஒரு சிறு புத்தகத்தில் தான் கண்டவற்றைக் குறிப்பாகவும், படங்களாகவும் பதிந்து கொண்டார் டார்வின். என்றோ வெடித்த எரிமலைக் குழம்பு அலை அலையாய் உருவாக்கிய அச்சமூட்டும் நிலப்பரப்பில் தனது வலையை விரித்திருந்தார் டார்வின். வெப்பம் காரணமாக அவற்றில் இருந்து கிளம்பிய மஞ்சள் நிறப் புகை அவரது பாதையை மறைத்தது. அதன் மேல் பரவி வளர்ந்த மரங்கள் உயிர்ப்பைக் காட்டிலும் இறப்பை உறுதிப்படுத்துவனவாக இருந்தன. அம்மரக் கிளைகளில் தனது பதின்மூன்று மட்டும் பதிநான்காவது வகை மஞ்சள் நிறப்பறவையைக் கண்டார் டார்வின்! அவற்றின் அலகுகள் விசாலமாகவும், வட்டமானதாகவும் இருந்தன. மற்ற தீவுகளில் அவ்வாறு காணப்படவில்லை. மேலும் அவை சிவப்பு நிறக் கனிகளை உண்டன. உலகெங்கும் மற்ற பகுதிகளில் இப்பறவைகள் விதைகளை மட்டுமே உட்கொள்ளும். ஆனால் அத்தீவிலோ சில வகைப் பறவைகள் விதைகளையும், சில கனிகளையும் உட்கொண்டன. அவற்றுக்குத் தக்கவாறு அவற்றின் அலகின் அமைப்பும் இருந்தது.

அப்போது தான் கிறிஸ்துவ நம்பிக்கையான கடவுள் அனைத்து உயிரினங்களையும் தற்போது இருப்பது போலவே படைத்தார் என்னும் நம்பிக்கையைச் சந்தேகம் கொள்ள ஆரம்பித்தார் டார்வின். வெகுகாலத்துக்கு முன் ஃபிஞ்ச் வகைப் பறவை சில எங்கிருந்தோ இந்தத் தீவுக்கு வந்து குடியேறி இருக்க வேண்டும். பின்னர் ஒவ்வொரு தீவிலும் ஒவ்வொரு வகையான பறவைகள் சூழ்நிலைக்குத் தக்கவாறு பரிணாம வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தக் குறிப்பைத் தனது A Naturalist’s Voyage on the Beagle எனும் புத்தகத்தில் குறித்திருக்கின்றார் டார்வின்.

இங்கிலாந்து திரும்பிய பிறகு தாமஸ் மால்துஸ் எனும் பொருளாதார மேதையின் கட்டுரைகளைப் படிக்க நேர்ந்தது. உலகில் மக்கள் தொகைக்குத் தகுந்தவாறு உணவில்லாமல் பற்றாக்குறை நிகழ்ந்த போதெல்லாம் பலவீனமான மக்கள் பசியால் மற்றும் நோயால் அல்லது சண்டையில் கொல்லப்பட்டு அழிந்து போனதாக அக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார் தாமஸ்.  வலிமையானவர்களால் மட்டுமே பிழைக்க முடிந்தது என்றும் கூறப்பட்டிருந்தது. இதே கொள்கை மிருகவுலகுக்கும் ஏன் பொருத்தமாக இராது என்று சிந்தித்துப் பார்த்தார் டார்வின்.

அதன் பின்னரே தனது குறிப்புகளையும், இக்கொள்கையையும் ஒன்று சேர்த்து தமது இனத்தில் வல்லவை பிழைக்கத் தம்மால் இயன்றதை ஒவ்வொரு உயிரினமும் முயற்சிக்கின்றது எனும் முடிவுக்கு வந்தார். இது இயற்கையாகவே நடைபெறுகின்றது எனும் பொருள்பட இயற்கைத் தேர்வுமுறை (natural selection) என்றும் அழைத்தார்.

சங்கோசமுடைய தனிமையை விரும்பும் மனிதரான டார்வின் வெகுகாலத்திற்குத் தனது கண்டுபிடிப்பை வெளியிடவில்லை. மற்ற இயற்கையாளர்களின் இடைவிடாத வலியுறுத்தலுக்குப் பின்னரே அவரது (Origin of Species) எனும் புத்தகம் வெளிவந்தது. அப்புத்தகம் இன்றுவரை பரிணாமம் பற்றி அறிந்து கொள்வோருக்கு ஒரு கலங்கரை விளக்கமாக, வழிகாட்டியாகத் தொடர்ந்து இருந்து வருகின்றது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக