வெள்ளி, ஏப்ரல் 01, 2016

திருப்புகழும் ஹைபர்லிங்க்கும்: 2

திருப்புகழும் ஹைபர்லிங்க்கும்: 2

அருணகிரிநாதர் காலத்தில் அண்ணாமலையை ஆண்ட பிரபுடதேவ மஹாராஜன் சபை. அருணகிரிநாதரின் பெருமை நாடெங்கும் பரவுவது பொறாத சம்பந்தாண்டான் பொறாமையால் பிரபுடதேவ மஹாராஜனைத் தூண்டி விட்டு அருணகிரி நாதருக்குக் கிட்டிய தெய்வ அருளை நிரூபிக்கச் சொல்கின்றான். அருணகிரிநாதரும் முருகனை அழைத்தார். எவ்வாறு அழைத்தும் முருகன் வரவில்லை. கண்மூடி அகக்கண்ணில் கண்ட போது முருகனை தாய் காளி மடியில் உட்கார வைத்து இறுகப் பிடித்துக் கொண்டிருக்கும் காட்சி தெரிந்தது! சம்பந்தாண்டான் ஹோமம் செய்து காளியிடம் முருகனை வரவிடாது செய்யுமாறு வேண்டிக் கொண்டதும் தெரிந்தது.

அப்போது பாடியது தான் இந்தத் திருப்புகழ் பாடல்.

அதல சேட னாராட அகில மேரு மீதாட அபின காளி தானாட ...... அவளோடன்
றதிர வீசி வாதாடும் விடையி லேறு வாராட அருகு பூத வேதாள ...... மவையாட
மதுர வாணி தானாட மலரில் வேத னாராட மருவு வானு ளோராட ...... மதியாட
வனச மாமி யாராட நெடிய மாம னாராட மயிலு மாடி நீயாடி ...... வரவேணும்
கதைவி டாத தோள்வீம னெதிர்கொள் வாளி யால்நீடு கருத லார்கள் மாசேனை ...... பொடியாகக்
கதறு காலி போய்மீள விஜய னேறு தேர்மீது கனக வேத கோடூதி ...... அலைமோதும்
உததி மீதி லேசாயு முலக மூடு சீர்பாத உவண மூர்தி மாமாயன் ...... மருகோனே
உதய தாம மார்பான ப்ரபுட தேவ மாராஜ னுளமு மாட வாழ்தேவர் ...... பெருமாளே

இப்பாடலில் சொல், பொருள், நயம் அனைத்தும் இனிமை. நாம் பார்த்துக் கொண்டிருக்கின்ற, ஒவ்வொரு இடமாகத் தொட்டுச் செல்லும் 'ஹைபர்லிங்க்', பாடல் ஆரம்பம் முதல் இறுதி வரை முழுவதுமாக‌ இருக்கின்றது!

அதல பாதாளத்தில் இருக்கும் ஆதிசேடன் ஆட, மேலே இருக்கும் மேருவும் ஆட, சிவனின் ஆடல் முத்திரைக்கு ஏற்ற வண்ணம் ஆடிய‌ காளியும் ஆட (காளி ஆட ஆரம்பித்தால் முருகனைப் பிடித்து வைத்திருக்க முடியுமா?!), சிவனும் ஆட, அங்கிருக்கும் பூதக் கணங்களும் ஆட, சரஸ்வதி ஆட, பிரம்மா ஆட, தேவர்கள் யாவரும் ஆட, சந்திரன் ஆட, லட்சுமி ஆட, விஷ்ணு ஆட, மயிலும் ஆட நீயும் ஆடி வர வேண்டும் என்கின்றார் அருணகிரியார். இதில் எத்தனை இணைப்பு இருக்கின்றது என்று பாருங்கள்.

அத்தோடு விட்டாரா? கதாயுதத்தை விடாமல் வைத்திருந்த பீமன் விடும் பாணங்களால் துரியோதனின் சேனைகள் பொடியாக உதவியவரும், கதறும் பசுக்கூட்டத்தை மீட்க உதவியவரும், விஜயனின் தேரோட்டி பாஞ்சசன்யம் எனும் தனது சங்கத்தை ஊதியவரும், அலைமோதுகின்ற பாற்கடலில் (உததி) சாய்பவரும், உலகத்தை மூன்றடிகளால் மூடிய பாதங்களைக் கொண்டவரும், கருடனை (உவணம்) ஊர்தியாகக் கொண்டவருமான மகாமாய விஷ்ணுவின் மருமகனே என்று மீண்டும் விஷ்ணு அவதாரங்களின் மகிமையைத் தொட்டுக் காட்டுகின்றார்.

இறுதியாக, தான் இருப்பது பிரபுடதேவ மஹாராஜன் சபையல்லவா? அதற்கும் தொடர்பு வேண்டுமென்று அன்றலர் மலர் சூடும் பிரபுடதேவ மஹாராஜன் உளமும் ஆட வாழ்கின்ற முருகனே என்று முடிக்கின்றார். இப்பாடலைப் பாடி முடித்ததும் முருகன் பிரத்யட்சமாக பிரபுடதேவ ராஜன் சபையில் காட்சியளித்தான். சம்பந்தாண்டான் வெட்கித் தலைகுனிந்தான்.

எந்த ஒரு தகவல் தொகுப்பையும் மனனம் செய்வதற்கு எளிய வழிமுறையாக ஒன்றைக் கூறுவார்கள். தகவல்களை ஏதேனும் ஒரு வழியில் ஒன்றுக் கொன்று தொடர்பு படுத்தி முதல் தகவலை மட்டும் ஞாபகம் வைத்துக் கொண்டால் அதன் தொடர்ச்சியாக தகவல் தொகுப்பு முழுவதும் நமக்கு நினைவுக்கு வரும். இப்பாடலில் ஏற்கனவே அருணகிரியார் தொடர்பு ஏற்படுத்தி இருப்பதால் இப்பாடலை மனனம் செய்வது மிகவும் எளிதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக