சனி, ஜூலை 07, 2012

கும்கி - 9


இன்னும் பலப்பல அதிசயம் பகர்வேன்
அறிந்து நினைந்து நினைந்து மகிழ்வீர்
பரந்து பட்டபூமிப் பந்தில் நாங்கள்
உவந்து வாழும் ஆயுள் அறிவீரோ?
மனிதர்க்கு நூறு எமக்கோ ஆயிரமென்றே
ஏளனமாய்ச் சொல்லி கும்கி குதித்தது!

ஆ!என்ன! சொல்ல‌து மெய்யா பொய்யா?
என்றபடி செல்வன் செல்வியைப் பார்த்தான்.

இருப்பதை விடுத்துப் பறப்பதைப் பார்ப்பதில்
மனிதர்க்கு என்றும் நிகரேதும் உண்டோ?!
எமதாயுள் அதிகமெனுங் கவலையை விடுவீர்!
எமதர்மன் வருநாளை யாரறிவார் சொல்வீர்!
மனிதர்க்கு ஆயுளொரு நூறு ஆண்டாம்
எமக்கிங்கு உளதோ ஆயிரம் நாளாம்
வாநாள் முழுதும் உழைப்பின்றி வீணே
நாறும் நூறால் பலனென்ன சொல்வீர்?

குறைபட்ட ஆயுளை விளக்க‌க் கேட்டதும்
தேய்ந்திட்ட‌ நிலவாய்ச் செல்வி சோர்ந்தனள்.
வெறும் மூவாண்டில் என்னதான் செய்வாயோ?
இப்போது வயதென்ன? சொல்நீ! என்றே
அடுக்கு அடுக்காய்க் கேள்வியைத் தொடுத்தாள்!

இருக்குங் காலத்தில் மகிழ்வுட னிருந்தால்
அருகும் ஆயுளால் கவலை வருமோ?
சீரோடு ஊராண்டு உலகாண்டு களித்திட்டேன்
மூவாண்டில் ஓராண்டு இன்றோடு கழித்திட்டேன்
யான்பிறந்த நாளில் வருந்த ஏதுமிலை!
மழலைகள் நீவிர் மகிழ்ந்து ஆடுவீர்!

பிறந்த நாளென்றால் எங்கிருந்து வருமோ?
அவ்விடத்து வந்தே நிறைந்தது குதூகலம்!
சுணைக்கால் பிடித்துக் குலுக்கினான் செல்வன்!
நீஆணா? பெண்ணா? கேட்டாள் செல்வி!

இனிக்கும் பசும்பாலும் குறளெனும் முப்பாலும்
தாய்மைப் பெண்பாலும் கம்பீர ஆண்பாலும்
எப்பாலும் வருதற்கும் முப்போதே அப்போதே
உருவான குடியானவர் நாங்கள் எமக்குள்
ஆண்பால் பெண்பால் பேதமில்லை அறிவீர்!
இருபாற் குணமும் ஒருங்கே கொண்டு
அரிதாய் விளங்கும் அர்த்தநாரி காண்பீர்!
இன்னும் ஏதேதோ சொல்லத் துவங்க‌
செல்வி! செல்வா! அழைத்தார் பாரதி!

தொடரும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக