வியாழன், ஜூலை 05, 2012

கும்கி - 8

பார்க்கச் சிறியோன் என்றே நினைத்தீரோ
தீர்க்கக் காரியம் புரியும் என்னை?
மூர்த்தி சிறிதானும் கீர்த்தி பெரிதெனல்
ஆர்க்கும் இறைக்கும் என‌க்கும் பொருந்தும்!

பாரியின் தேரிலன்று முல்லை வளைந்தாற்போல்
செல்வியின் விரலில் சொகுசாய் வளைந்தாடி
மூச்சுக்கும் சொல்லுக்கும் இடைவெளி விடாது
கீச்சுக் குரலில் கும்கி பகன்றது.

ஒருவிரல் நசுக்கலில் உயிரளவு கொண்டாலும்
பெருமை அடிப்பதில் அடிக்க ஆளில்லையே!
பிள்ளைப் பருவத்தீ ரென்றே ஏளனமோ?
பள்ளி சென்றறிவு கொள்வதும் அறிவாயோ?

காதும் குத்தியாச்சு! யாரும் அங்கே
சுற்றிப் பூவைக்க இடமும் இல்லை!
சொல்வ தெல்லாம் கேட்டுத் தலையாட்டிச்
செல்வியிவள் செல்லாள்! அறிவா யென்றாள்!

நடுநிசி போலும் இருண்ட மாநிழலில்
சமதளத்தில் சமுக்கமாய் சருகு நீக்கிக்
கிடைத்த இடத்தில் கவனப் பக்குவமாய்க்
கும்கியைக் கீழிறக்கி மெதுவாய் விடுத்தாள்!

ஏமாற்ற ஏமாற நானோ மனிதனில்லை!
வழிவழி வந்த அறிவிருக்க எமக்குப்
பள்ளியும் செல்லத் தேவையும் இல்லை!
எம்கதை சொல்வேன் தெளிய அறிவீர்!

வெள்ளையர் கருப்பர் குட்டை நெட்டையர்
மூக்கு சிறுத்தோர் தங்க முடியோர்
இன்னுஞ் சில‌விதமென‌ மானுடர் இருப்பர்
எமக்கோ ஈராயித்து இருநூறு இனமுண்டு!

மண்தோன்றி வளந்தோன்றாப் பழைய காலம‌தில்
மண்தோண்டிச் சிறந்தோங்கப் பரமன் படைத்தனன்!
பழுதேதும் இன்றி உழுதுண்டு வாழ்ந்து
தரிசான வயலைப் பரிசாக்கும் பணியெமது!

ஆண்டுகள் கொண்டு கொஞ்சம் அளந்தால்
வாண்டுகள் நீங்கள் கோடிகோடிப் புதியோர்!
இறுக்கப் பூமியிளக்கிய பழங்குடி நாங்கள்
நேற்றுப் பிறந்த புதுக்குடியினர் நீங்கள்!

கும்கி சொல்லில் சந்தேகம் இருப்பின்
நூற்புழுவாய் மாறி நூலகஞ் சென்று
வைட், லாயிட், டார்வின் போன்றோர்
எம்மைப் பற்றிச் சொன்னதைப் படிப்பீர்!

ஏதேதோ சொல்லும் கும்கியைக் கண்டு
தோதாய்ச் சம்மணிட்டு எதிரெதிர் அமர்ந்து
ஒருமித்துக் கருத்தைக் காதில் வைத்தபடி
இருந்தனர் நம்பியும் நம்பாமலும் தும்பிகள்.

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக