புதன், ஜனவரி 11, 2012

வாழைத் தாய்




மகனே!
வெறும் பத்துமாதச் சுமைக்காகவா
உன்னைப் பரிதவித்து வளர்த்தேன்?
தாய்மையின் அரிச்சுவடு ஏதென்று கண்டாய்?
உடலிரண்டு ஆகிவிட்டால் உயிரும் இரண்டாமோ?
வயோதிகத்தி லென்னைத் தாங்குவா யெனக்கருதி
வியாபாரி யாயுனை வார்த்ததாய் நினைத்தாயோ?
எங்கிருப்பினும் வாழ்க வென்பது என்றும்
பிரிந்த‌ காதலுக்கு மட்டும‌ன்று என்றும்
பிரியாத் தாய்க்கும் அதுதானடா!
உனக்கு மகிழ்வென்றால் முதியோர் இல்லமும்
மரத்தடியும் நடைத்தெருவும் சொர்க்கமே எனக்கு!
ஆலமரமாய் ஓரிடத்தில் நிழல்பரப்பி வாழநினைத்தேன்!
ஆலமரத்தின் பலனென்னப் பிரமாதமாய் இங்குண்டு?
வாழையின் உடலெலாம் தியாகமென்றே புரிந்ததாலோ
வாழைமரமாய் அடிபறித்து நிற்கவே நீநினைத்தாய்!
வீழுமட்டும் வாழையாய் வாழவும் அறிவேனடா!
கண்மூடி நானிங்கு வீழ்ந்த பின்னேனும்
அரிச்சுவட்டை மறந்தாலும் அடிச்சுவட்டை மறவாதிரு!

2 கருத்துகள்: