சனி, டிசம்பர் 31, 2011

(சு)தந்திரச் சுரண்டலும் சுந்தரக் காட்சியும்




எட்ட முடியாத் தூர வானம்
அட்டக் கரியாய்க் கவிழ்ந்து இருண்டு
செக்கச் சிவந்து நீலமாய் விரியும்

பார்த்திருக்கக் கிளைநுனியில் பசுமொட்டாய் இருந்து
வார்த்தெடுக்கக் காத்திருக்கும் அன்றலர் பனிமலரில்
கோர்த்திட்ட முத்தாய் மழைத்துளிகள் ஜொலிக்கும்

தாய்மையின் பெருமையாய் தவிக்கின்ற குஞ்சுக்கு
வாயொடு வாய்வைத்துச் சாம்பல் குருவியொன்று
காய்பழக் கொட்டையைப் பதமாக்கி ஊட்டும்

பலப்பலக் காட்சிகள் மலைத்திடும் மாட்சிகள்
காத்திருந்து கருத்தாய்க் கச்சிதமாய்ப் படமெடுத்து
வாங்கினேன் வாழ்வில் பரிசும் பொருளும்

காத்திடாது சட்டென்று சாலையைக் கடக்கையில்
நேர்ந்திட்ட‌ காட்சி யொன்றை அநிச்சையாய்க்
கரந்தட்டக் கிடைத்திட்ட‌ படமிது காண்பீர்!

படத்தின் விலையாய்ப் பொருளேதும் கிடைக்காது!
படத்தின் கேள்விக்கும் பொருளேதும் கிடைக்காது!
படத்தின் மாற்றெனப் பொருளேதும் கிடைக்காது!

அடிப்பொடி என்றால் இங்கேது அடிப்படை?
அடிப்போடி என்றே ஏழ்மை துரத்திடும்
அடிமேலடி பெற்றுக் கண்ணீரே கங்கையாகும்!

எனக்கென்ன? எப்போதும் கவலை இல்லை.

இதுபோல் படமெடுக்கக் காத்திட‌த் தேவையிலை!
பொன்விழாக் கண்டநற் (சு)தந்திரச் சுரண்டலில்
இச்சுந்தரக் காட்சி பாரதத்தில் எங்குமுண்டு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக