ஞாயிறு, டிசம்பர் 25, 2011

உலகைப் புரட்டிப் போட்ட 100 அறிவியல் கண்டுபிடிப்புகள் - 25

25. நோய்த்தடுப்பூசி (Vaccination)

கண்டறிந்தவர்: சீமாட்டி மேரி வோர்ட்லி மொன்டாகு & எட்வர்ட் ஜென்னர் (Lady Mary Wortley Montagu and Edward Jenner)


ஆண்டு: 1798

உங்களுக்குப் பெரியம்மை, பிளேக், போலியோ போன்ற கொள்ளை நோய்கள் வந்திருக்கின்றதா? அனைவருக்கும் வந்திருக்க நியாயமில்லை. ஆனால், மனிதன் தனக்குத் தானே போரிட்டு மடிவதை விட இது போன்ற கொள்ளை நோய்களால் கூட்டம் கூட்டமாக மரித்திருக்கின்றான். லட்சோப லட்சம் மக்கள் கொள்ளை நோய்களால் பாதிக்கப்பட்டு மடிந்திருக்கின்றனர். 

இக்கொள்ளை நோய்களை உலகிலிருந்து விரட்டியடித்தது எப்படி எவ்வாறு? 

1712ல் பிரிட்டனின் தூதுவராகத் துருக்கிக்குச் சென்ற தன் கணவருடன் 24 வயதான புகழ்பெற்ற கவிதாயினி மேரியும் சென்றார். தன் உடலில் அழிக்க முடியாத அவலட்சணமான தழும்பை ஏற்படுத்திச் சென்றதும், தன் நாட்டில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றதுமான பெரியம்மை நோயால் துருக்கியில் யாரும் பாதிக்கப்படுவதில்லை என்று கவனித்தார் மேரி. விரைவிலேயே அங்கே வாழும் பழங்குடி மக்களின் ஊசி குத்துதல் (ingrafting) சடங்கிற்கும் இதற்கும் தொடர்பிருக்க வேண்டும் என்று ஊகித்தார் மேரி. 

அங்கே யாருக்காவது பெரியம்மை நோய் தாக்கியதென்றால் உடனே கூட்டமாகக் கூடி நோய் கிருமி இருக்கும் திரவத்தை ஒரு தேங்காய்ச் சிரட்டையில் எடுத்துக் கொண்டு ஒரு வயதான பெண்மணி அவர்களின் மொழியில் ஏதோ பாடலைப் பாடிக் கொண்டே ஒரு ஊசியின் மூலம் திரவத்தைத் தொட்டு ஒவ்வொருவரின் நரம்பிலும் செலுத்துவதைக் கண்டார் மேரி. அதன்பின் அவ்வாறு செலுத்தப்பட்டவர் சிறிய அளவில் சொறி மற்றும் காய்ச்சலால் ஓரிருநாட்கள் அவதிப்படுவதையும் அதன் பின்னர் அவருக்கு அம்மை நோய் தாக்குவதில்லை என்பதையும் அறிந்து கொண்டார்.

1713ல் இங்கிலாந்து திரும்பிய மேரி இதுகுறித்த தனது கருத்தைப் பரவலாக அனைவருக்கும் அறியப்படுத்தினார். ஆனால் அனைவரும் அவரை முட்டாள் தனமாகப் பேசுகின்றார் என்று ஒதுக்கி விட்டனர். 1714ல் வேல்ஸ் இளவரசி இவரது பேச்சால் ஈர்க்கப்பட்டு, கைதிகளுக்கும் அனாதைகளுக்கும் சோதனை முறையில் இந்த ஊசிமுறையைப் பின்பற்றுவதற்கு அனுமதியளித்தார்!

மேரி அம்மை தாக்கப்பட்டவர்களிடமிருந்து சீழ் போன்ற திரவத்தை எடுத்து சோதனை முறையில் சிலருக்குக் குறைந்த அளவில் செலுத்தினார். இதனால் அவர்கள் இறப்பது மூன்றில் ஒருபங்காகக் குறைந்தது. தழும்பு ஏற்படுவது ஐந்தில் ஒருவருக்கே நிகழ்ந்தது. இவ்வாறு ஊசி போடுவதில் சில கெடுதல்களும் நிகழ்ந்தன. அம்மை நோய்க்கிருமிகள் வேகமாகப் பரவி பெருக்கமடைந்து விடுவதால் ஆபத்தானவையாகி விட்டன. எந்த ஊசி காக்கவேண்டுமோ அதுவே உயிரைக் குடிக்கும் எமனாகவும் மாறி விட்டது. இதனால் இந்த முறை அப்படியே வழக்கொழிந்து போனது.

அதன் பின்னர், 1794ல் வந்தார் எட்வர்ட் ஜென்னர். கிராமப்புறத்தில் வாழ்ந்த அவர் பால்பண்ணையில் வேலை பார்ப்பவர்களுக்குப் பெரியம்மை வருவதில்லை என்பதைக் கண்டறிந்தார். ஆனால், அவர்கள் அனைவருமே பசுக்களைத் தாக்கும் ஒருவித அம்மை நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதையும் கண்டுபிடித்தார். அவர்களின் கைகளில் சிறிய பாளமாக வெடிப்பை அந்நோய் ஏற்படுத்தியிருந்தது. ஜென்னர் ஒரு முடிவுக்கு வந்தார். அதாவது, பசு அம்மை நோய்க்கும், பெரியம்மைக்கும் ஏதோ தொடர்பிருக்க வேண்டுமென்றும், மாட்டு அம்மையால் தாக்கப்பட்டவர்கள் ஊசிகுத்துதல் முறை போன்று கிருமியை ஏற்றுக் கொள்வதால், அவர்களுக்குப் பெரியம்மை நோய் வருவதில்லை என்றும் முடிவு செய்தார். 

சோதனை முறையில் 20 குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பசு அம்மை நோய்க்கிருமிகளைச் சிறிய அளவில் ஏற்றினார் ஜென்னர். அனைவருக்கும் பசு அம்மை நோய் வந்தது. கைகளில் பாளங்கள் வந்து அவர்கள் பலநாட்கள் பாதிக்கப்பட்டனர். அதன் பின்னர் அனைவருக்கும் பெரியம்மை நோய்க்கிருமியையும் ஏற்றினார் ஜென்னர். அவர்கள் பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்டார்களேயானால் இறந்து விடுவதற்குக் கூட வாய்ப்பிருந்தது. ஆனால், அவர்கள் ஒருவரைக் கூட பெரியம்மை நோய் அண்டவில்லை!

இவ்வாறு முள்ளைக் கொண்டே முள்ளை எடுப்பதையும், விஷத்தைக் கொண்டே விஷத்தை முறிப்பதையும் கண்டறிந்த ஜென்னர் அதற்கு தடுப்பூசி முறை (vaccination) என்று பெயரிட்டார். 1798ல் அவரது ஆராய்ச்சியையும் உலகுக்கு வெளிப்படுத்தினார். Vacca என்றால் லத்தினில் பசு என்று பொருள். Vaccinia என்றால் பசு அம்மை நோய் என்று பொருளாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக