ஞாயிறு, டிசம்பர் 25, 2011

உலகைப் புரட்டிப் போட்ட 100 அறிவியல் கண்டுபிடிப்புகள் - 14

14. கண்டுபிடிப்பு: பாக்டீரியா
கண்டறிந்தவர்: ஆண்டன் வான் லியூவென்ஹூக் (Anton van Leeuwenhoek)
காலம்: 1680

ராபர்ட் ஹூக் முன்பே நுண்ணோக்கியில் பல மேம்பாடுகள் செய்திருந்தாலும், தனது முக்கியமான கண்டுபிடிப்பால் உலகில் முதன்முதலாக ஒரு நுண்ணுயிரியைக் காணும் வாய்ப்பைப் பெற்றவர் வான். அவரது கண்டுபிடிப்பு பல நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு வித்தாக அமைந்திருக்கின்றது.

எவ்வாறு கண்டறிந்தார்?

வான் ஒரு டச்சுக்காரர். துணி வியாபாரி. அறிவியல் மேல் தான் கொண்ட அளவிலா ஆர்வத்தால் சுயமாகக் கணிதமும் அறிவியலும் கற்றுக் கொண்டார். டச்சுமொழி அல்லாமல் வேறு மொழி தெரியாததால் தனது கண்டுபிடிப்புகளைப் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மிகுந்த சிரமத்துக்கு உள்ளானார். 

அவரது அறிவியல் பசிக்கு ராபர்ட் ஹூக்கின் இரண்டு படி லென்சுகள் உதவவில்லை. அவை மங்கலாகத் தெரிந்தன. அவராக உருவாக்கிய ஒரு நுண்ணோக்கியில் அதிகமாகக் குவிந்த ஒரே ஒரு ஆடியைப் பயன்படுத்தி வெற்றி கண்டார். இதனால் மிகத் தெள்ளத் தெளிவாகக் காண முடிந்தது. 
அவர் 1673ல் உருவாக்கிய 270 பவர் நுண்ணோக்கியை விட மேம்பட்ட ஒன்றைக் கண்டறிய 200 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது என்பது அவரது திறமைக்கு ஒரு சான்றாக அமைகின்றது. அதன் மூலம் 1 மீட்டரில் ஒரு மில்லியனில் ஒரு பகுதியைக் காண முடிந்தது. அவர் ஆராய்ச்சிக்கு மனிதனின் முடி, தேனீக்களின் கண், வாய் போன்றவற்றை எடுத்துக் கொண்டார். அவரைத் தவிர வேறு யாரையும் அவரது நுண்ணோக்கி வழியாகக் காணவும் அனுமதிக்கவில்லை. தான் கண்டதைத் தானே நேர்த்தியாக வரையப் பழகிக் கொண்டார்.

அதன் பின்னர், அவரது ஆராய்ச்சி நீர்த்துளி, ரத்த அணுக்கள், விந்து போன்றவற்றின்பால் திரும்பியது. திரவங்களைப் பார்க்க ஆரம்பித்ததும் தான் அவரால் நுண்ணுயிருலகத்தைக் காண முடிந்தது.
மனிதனின் கண்களுக்குப் புலப்படாத பாக்டீரியாக்களைக் கண்டறிந்து வியந்து அவற்றைப் படங்களாக வரைந்து தள்ளினார் வான்.
தொழில்முறை விஞ்ஞானியல்லாத அவர் தனது ஓய்வுக்காலங்களிலேயே தனது ஆராய்ச்சியைத் தொடர முடிந்தது. லத்தின் மற்றும் பிரெஞ்சு தெரியாததால் அவரால் அறிவியல் கட்டுரைகளையும் வெளியிட முடியவில்லை. இருந்த போதிலும், 1676ல் இருந்து லண்டன் ராயல் சொசைட்டிக்குத் தனது கண்டுபிடிப்புகளைக் கடிதங்கள் மூலம் பகிர்ந்து கொள்ள, அவர்கள் அதை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்து அனுப்பினார்கள். அக்கடிதங்கள் யாவும் இன்றும் நுண்ணுயிரிகளைப் பற்றி அறிந்து கொள்ள வழிவகை செய்கின்றன.

பாக்டீரியா தான் உடலில் புண் பரவவும், தொற்று நோய் வரவும் காரணம் என்று முதன்முதலில் அறிவித்தவரும் இவரே. ஆனால் 1856 வரை யாரும் இதை ஒத்துக்கொள்ளவில்லை. வான் வினிகர் பாக்டீரியாவை அழிக்கின்றது என்று கண்டறிந்து, புண்களுக்கு மருந்தாய் அதைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தினார். ஆனாலும் அவர் கூறியதை ஏற்றுக் கொள்ள உலகம் 200 ஆண்டுகள் காத்திருந்தது.

மிகப் பெரிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குப் படித்துப் பட்டம் வாங்க வேண்டியதில்லை. ஆர்வமும் இடைவிடாத முயற்சியுமே போதுமானது என்பதற்கு நிரூபணமாய்த் தைரியமாய் ஆண்டன் வான் லியூவென்ஹூக்கைக் கை காட்டலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக