ஞாயிறு, டிசம்பர் 25, 2011

உலகைப் புரட்டிப் போட்ட 100 அறிவியல் கண்டுபிடிப்புகள் - 24

24. புவியரிப்பு (Erosion of Earth)

கண்டறிந்தவர்: ஜேம்ஸ் ஹட்டன் (James Hutton)
நன்றி: விக்கிபீடியா.

காலம்: 1792

புவியில் மலைகளும் பள்ளத்தாக்குகளும் உருவானதற்குப் பல்வேறு காரணங்கள் கற்பித்து வந்தனர் முன்னோர்கள். புவியின் முகம் நோவா வெள்ளத்தைப் போல் ஏதாவது வியத்தகு அமானுஷ்ய நிகழ்வுகளால் சிதைக்கப்பட்டதாகக் கருதப்பட்டது. புவியின் மலைச்சிகரங்களுக்கும் அதல பாதாளங்களுக்கும் இது போன்ற கதைகளைத் தேடிக் கொண்டிருந்தனர். 

1780ல் கிட்டத்தட்ட ஓய்வு பெறும் 57 வயதை நெருங்கிய மருத்துவரும், விவசாயியும், புவியியல் ஆர்வலருமான ஜேம்ஸ் ஹட்டன் புவியின் பாறைகளைக் குறித்த கதைகளிலிருந்து மாறுபட்டுச் சிந்திக்கலானார். தனது நாடான ஸ்காட்லாந்தின் பாறைகளின் வயதைக் கொண்டு புவியின் வயதைக் கண்டுபிடிக்க முடியுமா எனும் ஆராய்ச்சியில் இறங்கினார்.

கரம் போன்ற நீண்ட வழுவழுப்பான உருண்டு திரண்ட மலைப் பாறைகளில் நடந்து சென்ற ஹட்டன், இவையெல்லாம் திடுமென ஒரே நாளில் ஒரே நிகழ்வால் உருவானது என்பதை நம்பமுடியாமல் தவித்தார். மாபெரும் வெள்ளங்கள் மாபெரும் பள்ளத்தாக்கை உருவாக்கின என்றும், அவை கல்லைப் புரட்டிப் போட்டதால் மலைகள் உருவாகின என்றும் அவரால் நம்பமுடியவில்லை. எப்பேர்ப்பட்ட வெள்ளத்தாலும் வழுவழுப்பான உருண்ட வடிவான பாறைகளை உருவாக்க முடியுமா என்று தனக்குள் கேள்வியை எழுப்பினார். நதிகளின் சமவெளிகள் எப்படி உருவாகின என்றும் கேள்வி எழுந்தது.

ஆக, தற்போதைய கொள்கை தவறென்பதை நிரூபணம் செய்ய முடிந்தாலும், உண்மையான காரணம் என்பதைக் கண்டறிந்து நிலைநிறுத்தினால் மட்டுமே அனைவரையும் நம்ப வைக்க முடியும் என்பதை உணர்ந்திருந்தார் ஹட்டன். ஹட்டனின் ஆராய்ச்சி எந்த அடிப்படை சக்தி புவியின் முகமாற்றத்துக்குக் காரணமாக இருக்கும் என்ற வழியில் செல்ல ஆரம்பித்தது.
அந்த ஆண்டு கோடை காலத்தில் ஹட்டன் உயரமான பள்ளத்தாக்கிலிருந்து விழும் ஒரு நீர்வீழ்ச்சியின் அருகே சென்றார். நீர்வீழ்ச்சியின் அருகே கீழே கிடந்த கூழாங்கற்களையும் மணல் துகள்களையும் தனது கரங்களில் எடுத்து உற்று நோக்கினார். அவற்றைத் தன் கைகளால் பிசைந்து பார்த்த ஹட்டன், இவையாவும் மலைமேலே எங்கிருந்தோ உருண்டு வந்து கீழே விழுந்திருக்க வேண்டும் என்று ஊகித்தார். அதற்கு முன் அது பெரிய கல்லாக இருந்து உடைந்து பின் நீர் வரும் பாதையில் உருண்டோடி வழுவழுப்பான தேகத்தைப் பெற்றிருக்கின்றது என்று ஊகித்துணர்ந்தார்.

அந்த நீர்வீழ்ச்சியானது தினந்தோறும், கற்களையும் மணலையும் கொண்டு வந்து கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்க்கின்றது என்று எண்ணினார். ஆக, புவியின் முகம் ஏதோ ஒருநாளில் உருமாறுவது அல்ல. அது தினந்தோறும் நிகழும் நிகழ்வால் ஏற்படுகின்றது. நீர் மட்டுமல்ல, சுழன்று அடித்து வீசும் காற்றும் இதே போன்று கற்களில் தனது கைவரிசையைக் காட்டுகின்றது என்பதைக் கண்டறிந்தார் ஹட்டன். மழைநீர் மலை மேல் விழுந்து கற்களைப் புரட்டி எடுத்து வந்து மணலாகச் சமவெளியில் கொண்டு வந்து சேர்க்கின்றது. இது ஆண்டாண்டு காலமாக நடந்து கொண்டே இருக்கின்றது. கால்வாய்களும், நீர்வீழ்ச்சிகளும் எறும்பூறக் கல்தேய்ந்த கதை என்பதைக் கண்டுகொண்டார்.

இதுவரை சரியாகவே கண்டறிந்த ஹட்டனுக்கு அடுத்து ஒரு கேள்வி மட்டும் தொக்கி நின்றது. இத்தனை ஆண்டுகாலமாக காற்றும் நீரும் புவியை அரித்து சமமாக்குகின்றது என்றால் மலைகள் எவ்வாறு உருவானது? ஏன் இத்தனை கோடி ஆண்டுகளில் புவியின் முகம் சீரானதாகவில்லை? இந்தக் கேள்விக்கான பதிலும் கிடைத்தால் மட்டுமே அவரது கண்டுபிடிப்பு முழுமையடையும் என்பதால் அதை நோக்கிய தன் கவனத்தைத் திருப்பினார் ஹட்டன். வெகுகாலம் ஆராய்ந்தே சரியான காரணத்தைக் கண்டறிந்தார் ஹட்டன். ஆம். புவியினடியில் கொதிநிலையில் இருக்கும் மையப்பகுதியே மலைகளையும் பாறைகளையும் வெளித்தள்ளி பெரிய மலைகளை உருவாக்குகின்றன என்பதையும் கண்டறிந்தார். உள்ளிருக்கும் அக்னி மலைகளை வெளித்தள்ள, வெளியிலிருக்கும் நீரும், காற்றும் அதைச் சமன்படுத்த முயல இது தொடர்கதையாக பூமாதேவியை அக்னி, வாயு, வருணன் ஆகியோர் கந்தர்கோலமாக ஆக்குவதை ஒருவழியாகக் கண்டறிந்தார் ஹட்டன்.

புவியியலில் ஒரு மாபெரும் சாதனை படைத்தவராகக் கருதப்படுகின்றார் ஹட்டன். அவரது கண்டுபிடிப்பு பல நவீன கண்டுபிடிப்புகளுக்கும் சாதனைகளுக்கும் வழிவகுத்தது என்றால் அது மிகையாகாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக