ஞாயிறு, டிசம்பர் 25, 2011

இங்கேயே சுவர்க்கத்தைப் படைக்கலாம் வா!




எப்போது நோக்கினும் என்னையே நோக்கினால்
எப்படி நோக்குவேன் உன்னையே நானும்?
எப்பாதை போயினும் எனைத்தேடியே நீவந்தால்
எப்படித் தேடுவேன் உன்னையே நானும்?
உன்னைக் கண்டதும் மரித்த‌ என்னுடலில்
உன்னுயிர் தந்ததால் தந்தையு மானாய்
என்னுயிர் உனதாக்கி நானோ தாயுமானேன்
புதியதொரு வாழ்க்கைச் சுரங்கக் கதவின்
பாதிச்சாவியாய் நானும் மீதியாய் நீயும்!
நிலவுக்கு வயதுண்டு கிரணத்திற் குண்டோ?
உடலுக்கு வயதுண்டு உள்ளத்திற் குண்டோ?
நினைத்தாலே குளிர்வீசும் முழுநிலாப் பொழுதில்
சொல்லாத சொல்லெலாம் கண்களில் சொல்லி
நில்லாமல் நம்மிருவர் கரமிழைத்துக் கவிபாடி
இங்கேயே சுவர்க்கத்தைப் படைக்கலாம் வா!

5 கருத்துகள்:

  1. புதியதொரு வாழ்க்கைச் சுரங்கக் கதவின்
    பாதிச்சாவியாய் நானும் மீதியாய் நீயும்!

    அருமையான பதிவு
    இல்லாத சொர்க்கம் எனச் சொல்வதைவிட
    இங்கேயே சொர்க்கத்தைப் படைக்கலாம் எனக் கூடச் சொல்லலாம்
    அத்தனை மனமொத்த காதலர்களாய் சித்தரித்திருக்கிறீர்கள்
    மனம் கவர்ந்த பதிவு வாழ்த்துக்கள்
    த.ம 1

    பதிலளிநீக்கு
  2. ஆம்! உங்கள் சொல் இன்னும் பொருத்தமாக இருக்கின்றது. எனவே திருத்தி விட்டேன். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  3. ///புதியதொரு வாழ்க்கைச் சுரங்கக் கதவின்
    பாதிச்சாவியாய் நானும் மீதியாய் நீயும்!////

    சமத்துவத்தின் ஆரம்பம்....

    பதிலளிநீக்கு
  4. எப்பாதை போயினும் எனைத்தேடியே நீவந்தால்
    எப்படித் தேடுவேன் உன்னையே நானும்?

    அருமை வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. நன்றி மகேந்திரன் & தனசேகரன்.

    பதிலளிநீக்கு