திங்கள், பிப்ரவரி 20, 2012

கும்கி - 5

முதல்வந்து அமர்ந்த செல்வனின் முன்னிருக்கை
முகஞ்சுருங்கி அழுத செல்விக்கே கிடைத்தது!
மாசுநிறை நகரநரகம் பின்நகரச் சென்றனர்
பாசிநிறை கிராமச் சொர்க்கம் நோக்கி

கருப்புச் சாலைகள் நீண்டெங்கோ செல்ல‌
பசுமைச் சோலைகள் நோக்கித் திரும்பினர்!
அலையாடும் படகாய் வாகனமும் தலையாட்டிச்
செம்மண் சாலையில் ஓடியது புழுதிபறக்க‌!

கிராம எல்லையில் தாண்டி யார்போவாரென‌
அரிவாள் குத்தீட்டி வேற்கம்புப் படையோடு
உக்கிரமாய் நின்றிருந்தார் பரிமேல் அய்யனார் 
பயத்துடன் மழலைகள் பணிந்து வணங்கினர்!

வந்தது கிராமம் பெருவளக்கரைப் பெயர்கொண்டு
எண்ணி ஐம்பது இல்லங்கள் மட்டுங்கொண்டு
சாரைப் பாம்பாய் நெளிந்த பாதையில்
ஊரைத் தாண்டிச் சென்றது வாகனம்!

ஆழப் பதிந்த வாழை யோர்புறம்
வாழத் தந்திடும் செந்நெல் லோர்புறம்
சூழக் கரைவளர் தென்னை யோர்புறம்
நீழல் தருமினிய மாக்கூட்ட மோர்புறம்

எங்கெங்கு காணினும் பசுமை வெள்ளம்
எங்கிருந்தோ நாசியைத் தாக்கும் சுகமணம்
மேடையேறப் பயமிலாக் குயிலின் கானாமிருதம்
மெய்யைத் தீண்டிடும் தென்றல் மென்கரம்!

கண்டுமயங்கி நின்றோரைக் கண்டொருவர் ஓடிவந்தார்
தவமணியென‌க் கண்டதும் மெய்மலர்ந்து வரவேற்றார்!
உடல்வன் மையும் உள்ளமென் மையுங்கொண்டு
உடையில் மட்டும் அழுக்கிருக்கும் முருகையன்!

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக