திங்கள், பிப்ரவரி 13, 2012

காதல் வந்து விட்டால்...




கண்கள் மூடிடக் காட்சிகள் விரியும்
பார்வைப் படையலில் பசிகள் திரியும்
ஏழையின் மனத்தில் கற்பகம் சொரியும்
செல்வன் மனத்தில் பஞ்சத்தீ எரியும்

உடலத‌ன் எடைநீங்கிப் புவிக்குள் புகுந்திடும்
உயிரதன் எடைவீங்கி எண்ணிலா மடங்கிடும்
தலைவன் வரும்வரை காலம் வெறுப்பாகும்
தலைவன் வந்ததும் காலமே வெறுப்பாகும்

மூளைக்கும் மனத்துக்கும் தொடர்பு அறுந்திடும்
கலங்கிய எதிலும் தலைவன்முகம் தெளிந்திடும்
தலைவனைக் கண்டதும் தெளிந்ததும் கலங்கிடும்
நோயே மருந்தாகும் மருந்தில்லா நோயுமாகும்

சொர்க்கமும் நரகமும் ஓரிடமாய்க் கண்டிட‌
ஆதவன் பகைவனாய் நிலவும் எதிரியாய்
வானம் எறிந்திடும் எரிகல்லாய்ச் சொல்விழும்
உலகம் துச்சமாகும் இன்பம் மிச்சமாகும்

காதலை முயன்று காதலைப் பயின்று
காதலைக் கரைத்துக் காதலைக் குடித்து
காதலைச் சமைத்துக் காதலைத் தின்று
சாதலும் மறையும் காதலே நிறையும்.

1 கருத்து:

  1. பாட்டுடை மாந்தர் பலரும் தேடிதிரியினும்
    மாட்டுமோ இவ்விதம் மகிழ்வுடன் சொல்லிட்டேன்.
    வரியின் வாயிலத னைவந்த‌வின் பமோமாறா
    வரியின் வழியே வந்து சென்றதே!


    நன்றி சகோ.

    பதிலளிநீக்கு