திங்கள், பிப்ரவரி 20, 2012

கும்கி - 6

இயற்கைத் தூரிகை வரைந்த நவீனஓவியம்
முயற்சிப் புழுஎட்டிய வெற்றிச் சிகரம்
சிறகாலே பூவிரிக்கும் வண்ணத் தூதகம்
மதுவாலே திளைக்கும் வாழ்க்கைப் பயணம்

நூறாய்ப் பறக்கக் கண்கொளாக் காட்சியில்
எதைத் துரத்த எதை விடவெனச்
செல்வன் ஆருக்கும் பிடிபடாது பறந்தான்
தானுமொரு வண்ணத்துப் பூச்சியென எங்கும்

கிணற்று ஆழத்தைக் கண்ணால் வியந்தபடி
எல்லை எதுவரை தமதென அளந்தபடி
தம்பதியர் அமர்ந்தனர் எளிமைச் சுகமாம்
பின்னிப் போட்டிருந்த கயிற்றுக் கட்டிலில்

குற்றாலமாய்ப் பாய்ச்சிய நீரின் வேகத்தைக்
கைநீட்டித் தடுத்துப் பார்த்துத் தோற்றதில்
செல்விக்கு முகமெங்கும் முத்தாய் விழுப்புண்கள்!
வாய்க்கால் கால்நனைத்துச் செய்தனள் உடன்படிக்கை

வரப்பெங்கும் நீர்வழிப் பாட்டையில் நடந்தாள்
இருமருங்கும் நெற்கதிர் தலைவணங்க ராணியாய்
அறுவடைக்குத் தயாரென்று இராமையா விளக்க
புதிதான சொற்களைப் புரியாமல் சிரித்தாள்.

வரப்பினின்று இராமையா கைபற்றி ஏறினாள்
காற்பெருவிரல் சுற்றியபடி மெல்லிய கயிறு
கயிறென்று நினைத்துக் கையெடுத்து நீக்கினாள்
கயிறல்ல வளைந்து நெளிந்தது ஒருஜந்து.

பாம்பென்றே பயந்து அலறித் தவித்தாள்
உதறிய கையை நீங்காது பற்றியதது
பாம்பன்று மண்புழு என்றையம் நீக்கினார்
அவ்விடம் அனைத்தும் அறிந்த இராமையா.

புழுவாவென்றே பொசுக்கென்று நசுக்கப் போனாள்
வேண்டாமம்மா என்றே தடுத்தார் தாத்தா
நானுமுயிர் தானே என்றொரு குரலும்வர
ஆச்சரியமா யங்குமிங்கும் தலைதிருப்பிப் பார்த்தாள்

மண்புழு பேசுமா? அவளுடன் பேசிற்று!
உனக்குப் பேசவும் வருமோ என்றாள்
உயிர்போந் தருவாயில் எல்லாம் வருமென்றது!
வியந்ததன் பெயர்கேட்கச் சொன்னது 'கும்கி'யென! 

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக