புதன், செப்டம்பர் 05, 2012

ஆசிரியர்கள்




கறைநீக்கும் அக்கறையில்
இக்கரைக்கும் அக்கரைக்கும்
பலரையும் கரைசேர்த்துக்
கரையாடும் படகுகள்.

நிலவிலா இருட்டிலும்
பனையலைப் புயலிலும்
தொலைதூரப் புள்ளியாய்க்
கலங்கரை விளக்கங்கள்.

தான்நின்ற இடத்திலே
அசையாமல் தான்நின்று
வருவோரை மேலேற்றிக்
களிகொளும் மாடிப்படிகள்.

தகுந்த வழியைத்
தகுந்த தருணத்தில்
தகுந்த போக்கருக்குத்
தான்காட்டும் கைகாட்டிகள்.

முட்களாய்த் தோன்றினாலும்
ஒரேயிடத்தில் சுற்றினாலும்
மேன்மையைத் தவறாது
அறிவிக்கும் கடிகாரங்கள்

அறிவுப் பொக்கிஷத்தைக்
கதவெலாம் திறந்துகாட்டிக்
கதவோரம் காத்திருக்கும்
இருப்புச் சாவிகள்.

அறியாமை இருளகற்ற‌
தீபத்தால் தீபமேற்றி
அறிவொளி அணையாமல்
அடைகாக்கும் மணிவிளக்குகள்.

உண்டு நிறையா
உறுபசி விருந்தைக்
கொடுத்துக் குறையா
அட்சய பாத்திரங்கள்

வெம்மை தான்கொண்டு
தண்மை நமக்களித்து
நிலவாய் நாமொளிர‌
வழிகாட்டும் ஆதவர்கள்

பிழையெலாம் பொறுத்துக்
கண்காணாக் கடவுளைக்
மனங்காணச் செய்யும்
அடையாளத் தூதுவர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக