புதன், ஜூன் 08, 2011

தாஜ்மஹால்

மடையன்!
ஒரு சமாதிக்கு இவ்வளவு செலவா?
என்றென்னைச் சிறைவைத்த அன்புமகன்!
அவனுக்குத் தெரியுமா?
எனதுயிரின் துயர்?

உலகோரென் காதல் உணர்ந்திடவா
பலகாலமிதைக் கட்டி மெருகூட்டினேன்?
இல்லையில்லை!
அவள்நினைவு பாகாய் உருக்கிடவே
துவண்டுபோ யழியாச் சின்னம் வைத்தேன்.

என்னுயிரைக் கொண்டவள் போனாள்
அன்னவளுயிர் கொண்டிவன் வாழ்கிறேன்.

அவள் மனமோ பாலினும் பளிங்கினும் 
பாண்டிய முத்தினும் சங்கினும் வெளுப்பு!
அவள் அன்புடன் நீரோடையை மாமணியை
அன்றலர் மலரை வைக்க லாமொப்பு!

காதற் பைத்தியம் பிடித்தே பிதற்றுகிறான்
பித்தனிவனென்று வையகம் சொல்லுமாயின்
மெத்த மகிழ்வு கொள்வேன் நித்தமு
ம‌த்தகுதி எனக்கிருக் கட்டுமென்று!

வெறுங்கற் கோட்டையென்று எண்ணி விடாதீர்
நொறுங்கிய என்மனக் கோட்டையின் படிமமிது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக