புதன், ஜூன் 08, 2011

எல்லையில் உயிர்ப்பூ

கண்ணுக்கெட்டு மட்டுந் தேடிப் பார்க்கிறேன்
காலுக்கெட்டு மட்டு மோடிப் பார்க்கிறேன்
பொங்குமலை யலையாய்மணல் வெள்ளம்
எங்கும்பிர வாகமாய்க் கிடக்கும் பாலையது.

ஊழிக்காற்றின் ஓசையோர் காதில் நுழைந்து
மூளையை உலுக்கிமறு காதில் செல்லுஞ்
சுருதிக்குச் சுதிசேர்த் தென்னிதயம் தாளத்தொடு
பொருந்தி மத்தளந்தட்டுவது எனக்கே கேட்கிறது.

சூரியன் மறைந்த மேற்கெதுவென மறந்தேன்
மணலன்னை மெத்தை மடிதனிலே மல்லாந்தேன்
தொலைவிருக்கும் விண்மீனிடம் வெப்பக் கடன்வாங்கி
எலும்புருக்கும் நள்ளிரவுக் குளிரின்குற்றம் நீக்கினேன்.

காலைக் கதிரவன் காலைக் கதிர்கொண்டு நனைத்தான்
பாலைக் கொடியவன் அனலைத் தான்வாங்கித் தெறித்தான்
கனன்றிடும் அரிசியின் உலையாய் மணலென்னைச் சமைக்க
என்நிழலன்றி வேறுநிழலறியாது தவித்தேன் துடித்தேன்

ஒருசொட்டு நீருக்குத் தவித்தது நாக்கு
ஓருபொட்டு நிழலுக்குத் தவித்தது கால்கள்
வடித்திட நீரிலாது வறண்டது கண்கள்
நொடியில் மெய்விடத் துடித்த தென்னுயிர்

இதோ மரணிக்கப் போகின்றேன்.
பெறப்போகின்றேன் விடுதலை.
உயிருடற் சங்கிலி உடையும் வேளை
கண்ணுக்குள் கண்ணான மனக்கண்ணில் வந்தாய்நீ.

சோலை சூழ்ந்தது
தென்றல் தொட்டது
பன்னீர் தெளித்தது
நறுமணம் கமழ்ந்தது

மரணத்தின் எல்லையில் உயிர்ப்பூ பூத்தது
உடல் கருகட்டும் பூக்கள் மணம் வீசட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக