புதன், ஜூன் 08, 2011

எக்குஞ்சு தன்குஞ்சு?

சோற்றைப் பிசைந்து வைத்தாள் அன்னை
மலத்தைப் பிசைந்து வைத்தான் தனயன்.
அழவில்லை யாரும் சிரித்தனர் இருவரும்.

அன்னை சிரிக்கையில் விட்டத்தை வெறித்தான்
அன்னை அழுகையில் குலுங்கிச் சிரித்தான்
உணர்ச்சிகள் சமமென்று ஆனது நிரூபணம்.

கடவுளைத் தொழுது 
கடவுளைப் பெற்றாள்
கடவுளாய்ப் பெற்றாள்.

பெற்றநாள் முதலாய்ப் பிரியாப்பேறு பெற்றாள்
மற்றவர் எள்ளிடென்றே எள்ளிநகை கொண்டார்
சற்றுமவர் சொற்கேளாத் தெய்வ வடிவினள்
உற்றவனி வனென்றே உயர்வாய்க் கொண்டாள்

காக்கைக்குப் பொன்குஞ்சு மேலோ தன்குஞ்சினும்?
யாக்கைக்குப் பொன்னணி மேலோ கண்ணினும்?

கணவான் கணவன் கனவாய்க் கரைந்தான்
மணமிலாப் பூவின்மது வருந்தித் தொலைந்தான்.
குணமகள் தலைகுனிந் தமர்ந்தாள்; சூளுரைத்தாள்
பிணமாய்ப் போனாலும் குனிவதில்லை யினியென்று!

இவளுலகம் தூளானது
அவனுலகம் இவளானது
இவளுலகம் அவனானபின்
இவருலகம் துவளவில்லை

கண்ணினும் மேலாய்க் காத்து வளர்த்தாள்
உயிரினும் மேலாய்ப் பேணி வளர்த்தாள்
வேருக்கும் மேலாய் அவனைத் தாங்கினாள்
புவிக்கும் மேலாய்த் துக்கம் பொறுத்தாள்.

ஆண்டுகள் மாதங்களாய் நாட்களாய்ச் சேர்ந்தன
வாண்டா யிருந்தவன் வாண்டாகவே யிருந்தான்.
கூண்டா யிருந்தவன் சிறகினை விரித்தான்
மாண்டா னொருநாள்; குனிந்தாள் மீண்டும்!

இம்முறை குனிந்தது இறைவனுக்கு நன்றியாய்
செம்மையாய்ச் சிறந்த வரந்தந் தானென்று!
எம்முறை யாலுமவன் மாளப்பின் தான்வாழ
எம்முறையும் வேண்டிய வரம்பலித் தன்றோ!

கண்முன்னே கிடந்தான் அன்றலர்ந்த மலராய்
கடைவாய் கள்ளமிலாச் சிரிப்பால் தேற்றிட
கடைவாயி லடைத்த அணைகள் தோற்றிடக்
கண்ணீர் கன்னமலை அருவியாய்ப் பொழிந்தாள்

காரியங்கள் முடித்தாள்; கிளம்பினாள் கால்நடையாய்!
அலைந்தாள் திரிந்தாள்; உயிர்விட விடமெடுத்தாள்!
யாருங்காணா திருக்க; மாலைவரை பொறுத்தாள்!
கண்மூடிக் காத்திருந்தாள்; தொட்டானொரு சிறுவன்.

அனுபவத் தாயே! நன்றாய் அனுபவித்தாயா? 
என்றான் கள்ளஞ் சிறிதுங்காணாக் கண்களால்!
கடைவாய்ச் சிரிப்பி ல‌வனைக் கண்டாளவன்
கைப்பற்றி முடிவை விடுக்க முடிவெடுத்தாள்!

தாய்மையின் கூட்டில் எக்குஞ்சும் தன்குஞ்சே!

மனநோயாளியான மகனைப் பெற்றெடுத்தாள் ஒரு தாய். அதனால் அவளைக் கணவன் விட்டுவிட்டு வேறொரு மணம் முடிக்க, மக‌னைக் காத்து வளர்த்த அவள், அவன் மாண்டதும் இவளும் மாள முடிவெடுத்தாள். முடிவில் மீண்டும் ஒரு மனநோயாளிச் சிறுவனைக் கண்டதும் தற்கொலை செய்யும் முடிவை விட்டு அவனைக் காக்க முடிவெடுக்கின்றாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக