புதன், ஜூன் 08, 2011

தாய்மைக்கலை

பார்த்ததைப் பார்த்தபடி வெள்ளைக் காகிதத்தில்
வார்த்ததைக் காட்டிடு மோவியக் கலையோ?

அல்லது நீக்கக் கல்லைக் கொத்தி
நல்லது காட்டுஞ் சிற்பக் கலையோ?

அசைந்தாடும் மனதை நிறுத்தித் தலையை
இசைந்தாடச் செய்திடும் பாடற் கலையோ?

கண்டதை வாதமிட்டு மனமும் நோகாது
கண்(டு)அதைப் பேசும் சொல்வளக் கலையோ?

கற்பனைக் காட்சியை யாவரு முணர்ந்திட
விற்பன் னராய்ச்சீர் தொகுக்குங் கவிநயமோ?

மண்ணைப் பொன்னாக்கிப் பொருளை மணியாக்கிக்
கண்ணிலும் மேலாய்க் காக்கும்வணி கக்கலையோ?

மன்னு மிந்தமா நிலமழகிற் சிறந்திட
இன்னு மெத்தனை யற்புதக் கலையுண்டோ?

தன்வயிற்றிற் பொன்மகவீந்து சீராட்டித் தாலாட்டித் 
தன்னிகரிலாத் தனயனாக்குந் தாய்மைக் கலையினும்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக