புதன், ஜூன் 08, 2011

சிங்கமும் முயலும்...

பேனா இரண்டைச் செருகியது போலே
.................சிலிர்த்து நீளும் அழகான செவிகள்
குறவர்தம் பாசியைக் கொண்டது போலே
.................சொலித்து மின்னும் வண்ணக் கண்கள்
வெடித்த பருத்திப் பஞ்சினை வெளுத்துப்
.................பொலிந்த பசும்பாற் கடலெனப் பட்டுடல்
துள்ளிக் குதித்துக் குதூகலிக்கு(ம்) முயலதை
.................வலிகொண்ட‌ சிங்கம் வலிக்க‌ச் சாப்பிடும்.

வெளுக்கும் வெய்யிலில் காய்ந்து கருவாடாய்
.................மெலிந்து சோர்ந்து தவித்தே போயினும்
துளிர்க்கும் பிஞ்சைப் பஞ்ச ம‌ண்டவிடாது
.................கலிதீர்க்க வந்தானென்று கல்விகற்ற‌ தனயன்
வெளிரிடும் வயதுபல கண்ட சட்டையில்
.................கிலிகொண்டு நகரத்தில் நேர்முகம் சென்றால்
உளரிடும் சொல்லொடு நடுங்கிடும் அவனைப்
.................பலிகொண்டு நகரம் பழிவாங்கித் தீர்க்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக